பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதல் தேதி

245


இந்தச் சமயத்தில் ‘அண்ணா இன்றுகூட அவரிடமிருந்து கடிதம் வந்தது...’ என்று ஆரம்பித்தாள் தங்கை காவேரி..

‘உடனே புறப்பட்டுவரச் சொல்லித்தானே...”

'ஆமாம்.'

‘இப்பொழுது எங்கே புறப்படுவது? முதல் தேதியன்று தான் புறப்பட வேண்டும்’

இடையில் பானு குறுக்கிட்டு 'ஏன், அப்பா என்னை எப்போ சர்க்கஸ்-க்குக் கூட்டிக் கொண்டு போவே?' என்று தினசரி கேட்கும் கேள்வியை அன்றும் மறக்காமல் கேட்டு வைத்தாள்.

'முதல் தேதியன்று கட்டாயம் கூட்டிக் கொண்டு போவேன்!' என்று தினசரி சொல்லும் பதிலைக் கணேசனும் மறக்காமல் சொல்லி வைத்தான்.

'சாக்லெட்.....'

'முதல் தேதிக்கு!'

'அப்பா ஹிஸ்டரிக்கு ஒரு நோட், ஜாக்ரபிக்கு ஒரு நோட், மேதமெடிக்ஸுக்கு ஒரு நோட்.....' என்று சந்தர்ப்பத்தைக் கைவிடாமல் ஆரம்பித்தான் முரளி.

'சரிதாண்டா ஆறு நோட்டுப் புத்தகங்கள் வேண்டுமென்று சொன்னாயே, அதைத்தானே கேட்கிறாய்?' என்று இடைமறித்துக் கேட்டான் கணேசன்.

"ஆமாம், அப்பா!"

"முதல் தேதியன்று வாங்கிக் கொண்டு வருகிறேன்"

"பேபி ஸைக்கிள்....?"

"முதல் தேதிக்கு!"

"எதிர்வீட்டில் இன்று எல்லோரும் 'எக்ஸிபிஷ'னுக்குப் போய் வந்தார்கள். இதுவரை அவர்கள் நாலு தரம் போய்வந்து விட்டார்கள். நீங்கள் என்னடாவென்றால் ஒருதரம்கூட அழைத்துக் கொண்டு போக மாட்டேன் என்கிறீர்கள்" என்றாள் அதற்குள் காப்பி விஷயத்தை மறந்த மரகதம்.

",அதுதான் முதல் தேதியன்று ஆகட்டும் என்று சொன்னேனே" என்றான், எதை விட்டாலும் முதல் தேதியை விடாத கணேசன்.

‘எல்லாவற்றுக்கும் முதல் தேதிதான்!’ என்று அலுத்துக் கொண்டு மரகதம் நடையைக் கட்டினாள். பானும் காவேரியும் அவளைப் பின்தொடர்ந்து சென்றனர்.