பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புரியாத புதிர்

295

எங்களுக்கென்று அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தனி அறைக்குள் பிரவேசித்தோம்.

மலர் மணம் எங்களை மனமுவந்து வரவேற்றது!

பன்னிரும் சந்தனமும் பல்வேறு பழவகைகளும் எதிர்த்தாற்போலிருந்த கண்ணாடியில் தெரிந்த காட்சிகண் கொள்ளாக் காட்சியாயிருந்தது!

ஆதுரத்துடன் உள்ளே நுழைந்த எங்கள் இருவருடைய கண்களிலும் ஆசைக் கனல் பறந்தது

ஆனால்....

பெருகிவந்த உணர்ச்சிக்கு எங்கள் இருவருக்கும் இடையேயிருந்த நாணம் தடை விதித்தது. அந்தத் தடையை மீறுவதற்கு - அப்பப்பா நாங்கள் செய்த பிரயத்தனங்கள் எத்தனை எத்தனையோ!

நான் அவளைப் பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்தாள்; அவள் என்னைப் பார்க்காத போது நான் அவளைப் பார்த்தேன்.

அவளுக்குத் தெரியாமல் என் இதழ்கள் சற்றே விரிந்தன; எனக்குத் தெரியாமல் அவள் இதழ்கள் சற்றே மலர்ந்தன.

ஆனால் இருவருக்கும் வாய்தான் அடைத்துப் போயிருந்தது!

இந்த நிலைமை வெகுநேரம் நீடிக்கவில்லை. நான் துணிந்து அவளை நேருக்கு நேராகப் பார்த்தேன்; அவளும் துணிந்து என்னை நேருக்கு நேராகப் பார்த்தாள். அவள் சட்டென்று தலை குனிந்தாள்; “நானும் சட்டென்று தலை குனிந்தேன். அவள் முகம் சிவந்தது; என் முகமும் சிவந்தது. என்னுடைய கண்கள் படபடவென்று அடித்துக் கொண்டன; அவளுடைய கண்களும் படபடவென்று அடித்துக் கொண்டன.

ஆம், அவை பேசின; பேசத்தான் செய்தன! எல்லோருக்கும் தெரிந்த பாஷையிலா? இல்லை; எவருக்கும் தெரியாத பாஷையில்! - இரைந்தா? இல்லை; இரகசியமாக:

இந்தக் கோலத்துக்கு மத்தியில் எங்களுக்கிடையேயிருந்த நாணம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவ ஆரம்பித்திருக்க வேண்டும். இல்லையென்றால், நான் ஏன் அவளை இப்போது விழுங்கிவிடுபவன் போல் பார்க்கிறேன்? அவள் ஏன் என்னை இப்போது விழுங்கிவிடுபவள் போல் பார்க்கிறாள்?

இருவரும் ஒருவர்மீது ஒருவர் வைத்த விழிகளை வாங்கவேயில்லை; பார்த்தோம் பார்த்தோம் பார்த்தோம் பார்த்துக் கொண்டே இருந்தோம்.