பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

விந்தன் கதைகள்


நேரம் போய்க்கொண்டே இருந்தது - ஆம், நேரம் போய்க்கொண்டேதான் இருந்தது!

இத்தனைக்கும் அவள் ஏற்கனவே எனக்குத் தெரிந்தவள்; நானும் அவளுக்கு தெரிந்தவன்.

ஆனால், பேசத்தான் நா எழவில்லை!

"இருவருக்கும் இடையே ஏதாவது ஒன்று தூதாக வந்து சேர்ந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்று நினைத்தேன்.

நினைத்ததுதான் தாமதம், சாளரத்தின் வழியாக எங்கிருந்தோ ஒரு பூனை வந்து எட்டிப் பார்த்தது; உடனே அந்தப் பூனையை நான் துணைக்கு அழைத்தேன்.

"மியாவ், மியாவ்..."

அவள் ‘களுக்'கென்று சிரித்தாள்; நானும் ‘களுக்'கென்று சிரித்தேன்.

பூனை இறங்கி வந்தது!

நான் மேஜை மீதிருந்த பாலை எடுத்துத் தரையில் கொஞ்சம் கொட்டி நிறுத்தினேன்.

பூனை சுவாரஸ்யமாக அந்தப் பாலை நக்கிக் குடித்தது.

"தனியாக வந்திருக்கிறீரே, தம்பதி சமேதராக வந்திருக்கக் கூடாதோ!" என்றேன் நான், பூனையைப் பார்த்து. பதிலுக்கு அது "மியாவ், மியாவ்" என்றது.

நான் அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இன்னும் கொஞ்சம் பாலைக் கீழே கொட்டினேன்.

அவ்வளவுதான்; அந்த மெல்லியலாள் பொறுமையிழந்தாள். ஓடோடியும் வந்து என்கையிலிருந்த பால் செம்பை வெடுக்கென்று பிடுங்கி, மேஜைமீது தக்கென்றுவைத்தாள்.

பூனை எடுத்தது ஓட்டம்!

நான் அவளுடைய மலர்க்கரத்தைப் பற்றி மதி முகத்தை நோக்கினேன்.

எங்களுடைய கரங்கள் இணைந்தன!

இணைந்தவை இணைந்தவைதான்; வெகுநேரம்வரை அவை பிரியவேயில்லை.

பிரியாமலே பேச்சு ஆரம்பமாயிற்று!