பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

விந்தன் கதைகள்


பொழுது விடிந்ததும் படுக்கையைச் சுருட்டி எடுத்துக் கொண்டு மாடியை விட்டு கீழே வந்தேன். அவள் பெட்டி, படுக்கையுடன் வந்து எனக்கு எதிரே நின்றாள்.

“என்ன, எங்கே பிரயாணம்? "என்று கேட்டேன்.

"ஊருக்கு!"என்றாள் அவள்.

“எப்பொழுது....?”

"இப்பொழுதுதான்...?”

"பின்னே ஏன் நிற்கிறாய்? - போகிறதுதானே?”

"உங்கள் உத்தரவை எதிர் பார்த்துத்தான்நிற்கிறேன்...."

“என்னுடைய உத்தரவு என்ன தெரியுமா? - நீ ஊருக்குப் போகக்கூடாது"

“என்னுடைய இஷ்டம் என்ன தெரியுமா? - நான் ஊருக்குப் போக வேண்டும்!”

"உன்னுடைய இஷ்டப்படி நடப்பதற்கு இது இடமில்லை"

"அதற்குத்தான் என் பிறந்தகத்துக்குப் போகிறேன்"

"போகக்கூடாது!”

“என்னை ஏன் வீணாகத் தடுக்கிறீர்கள்?”

"நீ மட்டும் நேற்றிரவு மாடிக்குப் போன என்னை ஏன் வீணாகத் தடுத்தாய்!”

"பனியில் நனைந்தால் உடம்புக்கு ஆகாதே என்று தடுத்தேன்!”

"நானும் நீ ஊருக்குப் போனால் எனக்குப் பொழுது போகாதே என்று தடுக்கிறேன்!”

அவள் சிரித்தாள்; நானும் சிரித்தேன். "இது ஏன் உங்களுக்கு முன்னமே தெரியவில்லை?” என்றாள் அவள்.

"நல்ல வேடிக்கை!" என்று சொல்லிவிட்டு, அவள் பெட்டியையும் படுக்கையும் தூக்கிக் கொண்டு போய் பழையபடி உள்ளே வைத்தாள்.

நான் அவளுக்குப் பின்னால் சென்று, “வாழ்க்கை வேடிக்கையல்ல! அது ஒரு புதிர்!” என்றேன்.

“வாழ்க்கை மட்டும் என்ன, மனிதவர்க்கத்தின் குணாதிசயமே ஒரு புரியாத புதிராய்த்தான் இருக்கிறது!” என்றாள்.அவள்.