கடவுள் என் எதிரி
41
“இனிமேல் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போகும் அதிகாரம் - நமக்குக் கிடையாது. அந்த அதிகாரம் எமனுக்குத்தான்" என்று சட்டத்தை நாங்களே சிருஷ்டித்துக் கொண்டு அதை வாழ்க்கையில் பின்பற்றுவது என்றும் தீர்மானித்து விடுகிறோம்.
இத்தனையும் இரண்டே நிமிஷங்களில் என் கற்பனை உலகில் நடந்தேறி விடுகின்றன! அப்புறம் நான் அவளை எப்படி மறப்பது? - அவளுக்காக எதையும் செய்யத் தயாராகி விடுகிறேன்.
அவளுக்காக அவள் அண்ணா செய்த குற்றத்தை நாமே செய்ததாக ஒப்புக் கொள்ள வேண்டும். அப்பாகண்டிப்புக்காரர்தான் என்றாலும் போலீஸ் லாக்-அப்பில் நம்மைப் பார்த்ததும் அவர் மனம் இரங்கி விடும். மன்னித்து விடுவார். அப்புறம் கோதையைப் பற்றி அவரிடம் சொல்ல வேண்டியது. அவளை எப்படியாவது கல்யாணம் செய்து கொண்டு ஜம்மென்று வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியது.
சரி, தீர்மானித்தாகிவிட்டது. இன்றே செய்துவிட வேண்டியது தான்!
அன்றே செய்தும் விட்டேன். ஆனால் என்ன ஏமாற்றம்?
என் அப்பாவைப் பற்றி நான் என்ன நினைத்தேன்? கடைசியில் நீதிமன்றத்தில் நான் நிறுத்தி வைக்கப்பட்ட போது அவர் என்ன சொன்னார்?
"என் பிள்ளையாயிருந்தால் மட்டும் என்ன? அயோக்கியனுக்கு நான் ஒரு போதும் அநுதாபம் காட்டமாட்டேன்"
என்ன ஈரமில்லாத நெஞ்சம்?
முடிவு என்ன? சிறைவாசம் ஏற்றுக்கொண்டேன்; அநுபவித்தேன்.
ஆனால், அப்படி அநுபவித்ததிலும் நான் துன்பத்தைக் காணவில்லை; இன்பத்தைத் தான் கண்டேன்.
அதற்குக் காரணம் கோதை தான் என்று சொல்லவும் வேண்டுமா?
அவள் அண்ணா கிருபாநிதி எனக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். அவை யெல்லாம் வெறும் கடிதங்கள் தானா?