பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தங்க வளையல்

சிறுவனாயிருந்தபோதே நான் சிங்கப்பூருக்குப் போய்விட்டேன். காரணம் தாய் தந்தையற்ற அனாதையாயிருந்ததுதான். என்றைக்காவது ஒரு நாள் போயே போய் விடப்போகும் இந்த உயிரின்மீது எனக்கிருந்த ஆசையால்தான் யுத்தத்திற்குப் பயந்து திரும்பவேண்டி வந்தது. சென்னைத் துறைமுகத்தை வந்தடைந்தபோது எனக்கு எங்கு செல்வதென்றே புரியவில்லை. நகரை நான்கைந்து முறை வலம் வந்து பார்த்தேன்; வழி ஒன்றும் தோன்றவில்லை.

இரவு எட்டு மணி இருக்கும். மழை ‘சோ’ என்று பெய்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான் எனக்குப் பிறப்பிடமான வேலூரில் இருக்கும் போது எனது நண்பன் அப்துல் காதரின் ஞாபகம் வந்தது. நான் அவனைப் பார்த்துச் சுமார் பத்து வருடங்களுக்கு மேலிருக்கும். ஆகவே இப்பொழுது அவன் அதே ஊரிலேயே இருக்கிறானோ என்னமோ என்ற சந்தேகம் வேறு என்னைப் பேதலிக்கச் செய்தது. இருந்தாலும் இரவு எங்காவது தங்கிவிட்டு மறுநாள் அவனைப் போய்ப் பார்ப்பதென்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், அஜ்ஜா என்னும் அழகுத் தெய்வம் அன்றிரவே எனது முடிவை மாற்றிக் கொள்ளச் செய்துவிடும் என்று நான் அப்பொழுது எதிர்பார்க்கவில்லை. எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?

அந்தப் பெரு மழையில் நனைந்துகொண்டே அப்பொழுது நான் சைனாபஜார் ரோட்டில் நடந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு காலி ஜட்கா போய்க் கொண்டிருந்தது. “ஏய், ஜட்கா! ஏய், ஜட்கா!” என்றேன் நான். அவன் என்னைச் சட்டை செய்யாமல் தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான். ‘திடுதிடு’ வென்று ஓடி நான் வண்டிக்கு முன்னால் போய் நின்றேன். அவன் வண்டியை நிறுத்தி விட்டு “எங்கே போவணும், மகாராஜ்!” என்று கேட்டான். அப்படிக் கேட்கும்போது அவனது கண்கள் சுழன்றன; பெரிய கஞ்சாக் குடியன் போலும்!

வண்டியில் ஏறிக் கொண்டேன். சிங்கப்பூரிலிருந்து திரும்பிய கதையை அவனிடம் சொல்லி, இரவு எங்கேயாவது தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று அவனையே கேட்டேன். எனக்குப் பிடித்தமானால் தன் வீட்டிலேயே தங்கலாமென்று அவன் சொன்னான். நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.