பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

விந்தன் கதைகள்

”ஏன், தெரியவில்லையா? நீயும் நானும்தான்!”

“இப்படி நடக்குமென்றா நினைக்கிறீர்கள்?”

“நடக்காது”

“ஏன் நடக்காது?”

“சித்தப்பா சொல்வதை நீ கேட்டதில்லையா?”

“என்ன சொல்கிறார்!”

“என்னுடைய லட்சணத்துக்கு உன்னைக் கல்யாணம் செய்து வைக்க வேண்டியது தான் பாக்கி என்கிறார்!”

“ஆமாம், உங்களைக் கண்டால் ஏன் அவருக்கு வெறுப்பாயிருக்கிறது?”

“இது தெரியாதா? நான் அவருடைய அண்ணாவின் பிள்ளை; அதிலும் வரும்படி கட்டை!”

“நான் துர்ப்பாக்கியசாலி உங்கள் அப்பாவாயிருந்தால் அப்படிச் சொல்வாரா?” என்றாள் அவள் சோகக் குரலில்.

“நானும் துர்ப்பாக்கியசாலிதான்” என்று சொல்லிக் கொண்டே அவளுடைய கையிலிருந்த படத்தை நான் பிடுங்கப் போனேன்.

“வேண்டாம், என்னிடமே இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டே அவள் அந்தப் படத்துடன் ஓட எத்தனித்தாள். நான் விடவில்லை; அவள் ஓட, நான் ஓட ஓடிக் கொண்டே இருந்தோம். கடைசியில் வேறுவழியின்றி அவளுடைய பின்னலைப் பிடித்துக் கொண்டேன்.

இந்தச் சமயத்தில் யாரோ தெரு வாயிலில் வருவது போலிருந்தது. திடுக்கிட்டுத் திடீரென்று பிடித்துக் கொண்டிருந்த பின்னலை விட்டுவிட்டு, ‘இந்தப் பூனையும் அந்தப் பாலை குடிக்குமா?’ என்பது போல் மெல்ல எனது அறைக்கு வந்து விட்டேன். நான் பின்னலை விட்ட வேகத்தில் அவள் கீழே விழுந்து விட்டாள். அப்பொழுது அங்கே சித்தி, “ஐயோ பெண்ணே!” என்று சொல்லி அவளை எடுத்து அணைத்துக் கொண்டாள்.

“புடவை தடுக்கி விழுந்து விட்டேன், மாமி!” என்று சொல்லிக் கொண்டே அவள் என்னைக் கடைக்கண்ணால் பார்த்துக் குறுநகை பூத்தாள். அப்பொழுது நான் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தேன்.

***