328
விந்தன் கதைகள்
ஒரு நாள் மாலை ஜானகிராமன் பொழுதோடு வீட்டுக்கு வந்தான். அவனுக்குக் காப்பி கொடுத்த பிறகு, "எங்கேயாவது சென்று சிறிது நேரம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தால் தேவலையே!" என்றாள் வைஜயந்தி.
இதை அவள் சாதாரணமாய்த்தான் சொன்னாள். இருந்தாலும் ஜானகிராமனின் உள்ளத்தை அது என்னவோ செய்தது. அவன் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தான். பிறகு "கடற்கரைக்காவது சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு வருவோமா?" என்றான்.
- "எனக்கு ஆக்ஷேபணையில்லை; ஆனால் உங்கள் தாயார்...."
- "அவளிடம் ஏதாவது...?"
- "பொய்யா சொல்லுவீர்கள்?"
- "ஆமாம்; அவள்தானே நம்மைப் பொய் சொல்லச் சொல்கிறாள்?"
- "சரி, என்ன பொய் சொல்வீர்கள்?"
- "இப்பொழுது எங்கே பார்த்தாலும் நவராத்திரி விழா நடக்கிறதே, யாரோ கொலுவுக்கு அழைத்திருப்பதாகச் சொன்னால் போகிறது!"
இதைச் சொல்லி அவன் வாயைக்கூட மூடவில்லை; "காரியம் ஒன்றும் நடக்காவிட்டாலும் இந்த வீட்டில் பேச்சுக்குக் குறைவில்லை?" என்று இரைந்து கொண்டே அலமேலு உள்ளே வந்தாள்.
ஜானகிராமன் 'திருதிரு' வென்று விழித்துக் கொண்டே, "ஒன்றுமில்லை, அம்மா!" நண்பன் ஒருவன் எங்களை நவராத்திரி விழாவுக்கு அழைத்திருக்கிறான்..." என்று ஆரம்பித்தான்.
"அதற்கு ஒரு வயசுப் பெண்ணை அழைத்துக் கொண்டு நீ தனியாகப் போக வேண்டுமா?"
"ஆமாம், அம்மா! ஒரு மணி நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்துவிடுகிறோம்."
"சரி, சரி; ஜாக்கிரதையாகப் போய்விட்டு வா; சீக்கிரமாகத் திரும்பி விடு!" என்றாள் தாயார்.
ஜானகிராமன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.
★★★