பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

விந்தன் கதைகள்

"சரிதான், வருஷத்துக்கு ஒருதடவையோ, இரண்டு வருஷத்துக்கு ஒருதடவையோபிள்ளை பெற்று வைப்பதோடு உங்கள் குடும்ப சேவை தீர்ந்து விடுகிறதாக்கும்!"

"ம், அதை நெனைச்சிப்பார்த்தா எங்களுக்கே வெட்கமாகத்தான் இருக்குது. என்ன செய்யறது!, சாமி?"

"என்ன செய்யவாவது! முதலில் நீங்கள் இந்தச் 'சாமி சாமி,' என்கிறதை விட்டுத் தொலைக்கணும்; என்னைப் போல நீங்களும் 'சாமிகள்தான்' என்று நினைத்துக் கொள்ளணும்!"

"சரி, நெனைச்சுக்கிட்டோம்!"

"அப்புறம் அந்த நைனாமுகம்மதுவைப் பற்றியும் நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பார்க்கவேண்டும். உங்களைப் போன்றவர்களிடம் மூன்று ரூபாய்க்கு வாங்கிய மீனை ஒன்பது ரூபாய்க்கோ, பன்னிரண்டு ரூபாய்க்கோ விற்று அவன் ஆயிரமாயிரமாகப் பணம் சேர்த்து விட்டான். இருக்க வசதியானவீடு, வேளாவேளைக்குச் சுகமான சாப்பாடு, வெளியே போய் வருவதற்கு குதிரைவண்டி எல்லாம் அவனுக்குக் கிடைத்து விட்டன. இத்தனைக்கும் உங்களைப் போல் அவன் ஒருநாளாவது கஷ்டப்பட்டதுண்டா? கிடையாது; கிடையவே கிடையாது. உழைத்துக் கொடுத்தவர்கள் நீங்கள்; உண்டு கொழுத்தவன் அவன். முதலில் உங்கள் மீனை விலைக்கு வாங்கிய அவன் பின்னால் உங்களையே விலைக்கு வாங்கி விட்டான்! ஆரம்பத்திலேயே நீங்கள் அவனிடம் கடனும் வாங்காமல் அதற்காக மீனையும் விற்காமல் இருந்திருந்தால் இன்று அவனைப்போல் நீங்களும் சௌகரியமாக வாழ்ந்திருக்கலாமல்லவா?

"அதெல்லாம் நம்மாலே ஆகிற காரியமா, சாமி?"

"என் ஆகாது சாமி, எல்லாம் முயன்றால் ஆகும், சாமி!"

"ம், அன்னிக்கி எழுதினதை அவன் அழிச்சா எழுதப் போறான்? நாங்க கஷ்டப்படணுங்கறது எங்க தலையெழுத்து; நைனாமுகம்மது சொகப் படணுங்கிறது அவன் தலையெழுத்து!" என்றான் அவன்.

எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்து விட்டது. “கையெழுத்துக் கூடப் போடத் தெரியாத பயல்களெல்லாம் தலையெழுத்தைக் கட்டிக்கொண்டு அழும்வரை தமிழ் நாடாவது, உருப்படுவதாவது!” என்று கறுவிக் கொண்டே, எழுந்து அவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் நடையைக் கட்டினேன்.