பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

விந்தன் கதைகள்

கலாசாலை 'மைனர்'கள் இருவர் - ஒருவர் தோளின் மேல் ஒருவர் லாகவமாகக் கையைப் போட்டுக் கொண்டு அவர்களை நோக்கி வந்தனர்.

அவர்களில் ஒருவன் வைஜயந்தியைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே 'எப்படி?' என்றான்.

இன்னொருவன், "இருட்டிலே எந்த உருப்படியாயிருந்தாலும் பிரமாதமாய்த்தான் இருக்கும்!" என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த சிகரெட்டை ஓர் இழுப்பு இழுத்துப் புகையைக் குபுகுபுவென்று விட்டான்.

இந்த விமர்சனத்துக்குப் பிறகு இருவரும் தங்களுக்குத் தெரிந்த 'இங்கிலீஷ் டியூன்' ஒன்றைச் சீட்டியடித்துக் கொண்டே பாட ஆரம்பித்தனர்.

பாட்டு முடிந்ததும் ஜானகிராமனுக்கும் வைஜயந்திக்கும் இடையே இருந்த இடைவெளியைச் சுட்டிக் காட்டி, "இப்படிப் போவோமா?" என்றான் ஒருவன்.

"ஓ, போவோமே!" என்றான் இன்னொருவன்.

ஜானகிராமன் அவர்களை வெறுப்புடன் நோக்கினான். அவசியமானால் பாதரட்சையிலிருந்து பட்டுக்குஞ்சம் கட்டிய விளக்குமாறு வரை ருசி பார்ப்பதற்குத் தயாராயிருந்த அந்த ‘மைனர்'கள் அதை லட்சியம் செய்யவில்லை; இருவருக்கும் நடுவே புகுந்து சென்றனர். சிறிது தூரம் சென்றபிறகு மீண்டும் திரும்பி இருவருக்கும் நடுவே வந்தனர்.

இந்தத் திருவிளையாடலின் காரணமாகத் தன் கணவன் பொறுமையை இழக்காமலிருக்க வேண்டும் என்பதற்காக, "இது என்ன சங்கடம்? எழுந்து போவோம் வாருங்கள்!" என்றாள் வைஜயந்தி. தம்பதிகள் இருவரும் மீண்டும் தனிமையை நாடி நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் 'களுக்'கென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. சிரித்தவர்கள் வேறு யாரும் இல்லை; 'டூப்ளிகேட் இங்கிலீஷ்'காரர்கள்தான்!

"ஒருவேளை இவர்களை இங்கே அனுப்பி வைத்த கைங்கரியம் அம்மாவைச் சேர்ந்ததாயிருக்குமா!" என்றான் ஜானகிராமன்.

"தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை!" என்றாள் வைஜயந்தி.

"சரி, சரி; அந்தக் கோயிலுக்கே போய்த் தொலைவோம், வா!" என்றான் எரிச்சலுடன்.