பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருப்தி

441

"பாக்ஸ் ரோடில் ஏதோ ஒரு பங்களா காலியாயிருப்பதாகச் சொன்னார்கள், சாயந்திரம் வேண்டுமானால் வாருங்களேன்; போய்ப் பார்த்து விட்டு வரலாம்" என்றேன் நான்.

"நன்றி!" என்று 'நாகரிகமாகச் சொல்லிவிட்டு - அதாவது உதடு உள்ளத்தைத் தொடாமலும், உள்ளம் உதட்டைத் தொடாமலும் சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர்!

அவரைப் போன்றவர்களுக்கு அதுதானே நாகரிகம்?

சொன்னது சொன்னபடி, அன்று மாலை குழந்தை விண்ட்டெருடன் நண்பர் நட் வந்தார். மூவரும் பாக்ஸ் ரோடுக்குச் சென்றோம். வழியில், "சாவியை வாங்கிக்கொண்டு விட்டீர்களா?" என்றார் நண்பர்.

"ஓ, வாங்கிக்கொண்டு விட்டேனே?" என்றேன் நான்.

பார்ப்பதற்கு அழகாய்த்தான் இருந்தது பங்களா; ஆனால் கிழக்குப் பார்த்த வாசல்.......

"தெற்குப் பார்த்த வாசலாயிருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்" என்று தம் முதல் குறையை முதல் முதலாக வெளியிட்டார் நண்பர்.

"கிழக்குப் பார்த்த வாசலும் நல்லதுதான்!" என்றேன் நான்.

"வாசலில் வேப்பமரமல்லவா இருக்கிறது? பூவரசு வைத்திருந்தால் விசேஷமாக இருந்திருக்கும்" என்று நண்பர் தம் இரண்டாவது குறையை வெளியிட்டார்.

"அதனாலென்ன, நீங்கள் வந்த பிறகு வேண்டுமானால் பூவரசும் கொண்டுவந்து வைத்துக்கொள்ளுங்களேன்!"

"வீட்டின் அகலம் எத்தனை அடி இருக்குமென்று நினைக்கிறீர்கள்?"

"ஏனாம்?"

"இருபத்தைந்து அடி இருந்தால் மனைவி மாண்டு போவாளாம், ஸார்!"