பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதவி

ண்டண், டண் டண், டண் டண், டாண் டாண்!

"வயிறு பன்னிரண்டு மணிக்கே சாப்பாட்டு மணி அடித்து விட்டது; இவன் என்னடா வென்றால் ஒரு மணிக்கு அடிக்கிறான்!" என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த 'ஸ்டிக்'கைக் 'கே'ஸின் மேல் வைத்து விட்டுக் கையைக் கழுவுவதற்காகக் குழாயடியை நோக்கிச் சென்றான் கதிர்வேலு.

"எத்தனை மணிக்கு அடித்தால் என்ன, நம்மைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதானே?- செய்தால் கூலி; செய்யாவிட்டால் வயிறு காலி!" என்று சொல்லிக்கொண்டே அவனைத் தொடர்ந்தான் கோவிந்தசாமி.

"ஆமாமாம், நாமெல்லாம் 'எக்ஸ்ட்ரா கம்போஸிட்டர்'கள் தானே? அதைக்கூட மறந்துவிட்டேன், பசியில்!" என்று கதிர்வேலு தனக்குத் தானே அசடு வழியச் சிரித்துக் கொண்டான்.

அப்போது, "பசி ஒரு வரப்பிரசாதம்!" என்று சொல்லிக்கொண்டே அங்கு வந்து சேர்ந்தான் ஆரோக்கியசாமி.

"யாருக்கு?" என்று அவனுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த அருணாசலம் கேட்டான்.

"போயும் போயும் அதை உன்னிடம்தானா சொல்ல வேண்டும்?" என்றான் ஆரோக்கியசாமி, அப்போது தான் காரை விட்டுக் கீழே இறங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்த முதலாளியைக் கடைக்கண்ணால் கவனித்துக்கொண்டே.

அதற்குள், "ஏண்டா மெஷின்களெல்லாம் நின்றுவிட்டன?" என்று யாரையும் குறிப்பிட்டுக் கேட்காமல், எல்லோருக்கும் பொதுவாக நின்று இரைந்தார் அவர்.

"ஆபீஸ் கடிகாரம் அரை மணி நேரம் 'ஸ்லோ ' என்பதற்காக அவர்களெல்லாம் பன்னிரண்டரை மணிக்கே சாப்பாட்டுக்குப் போய்விட்டார்கள், ஸார்!" என்றான் அருணாசலம், வழக்கம்போல் எல்லோரையம் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து நின்று.

பீதாம்பரத்துக்கு இது பிடிக்கவில்லை; "இதோ வந்து விட்டாரேடா ‘போர்மேன் பொன்னையா' புனர்ஜன்மம் எடுத்து!" என்று ஏகாம்பரத்தின் காதோடு காதாகக் கிசுகிசுத்தான்.