பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதவி

447

அருணாசலத்தின் 'எலிக்கா'தில் அது விழுந்து விட்டது. அவன் விடுவானா, அந்தச் சந்தர்ப்பத்தை? "தட்டிக் கேட்க ஆளில்லாமற் போனதால்தான் எல்லோரும் சண்டப்பிரசண்டர்களாகிவிட்டீர்கள்!" என்று 'போர்மேன்' இல்லாத குறையை நாசூக்காகத் தெரிவித்துக்கொண்டான், முதலாளியிடம்.

அவரோ அதைக்கூடப் பொருட்படுத்தாமல், "சாப்பாடு, சாப்பாடு, சாப்பாடு! எப்போது பார்த்தாலும், சாப்பாட்டு நினைவுதான் இந்தப் பயல்களுக்கு!" என்று தம்மைப் பொறுத்தவரை அந்த நினைவே இல்லாதவர்போலச் சாப்பிடப் போய் விட்டார்!

எப்படியிருக்கும், அருணாசலத்துக்கு? அவருக்காகத் தான் எடுத்துக் கொண்ட சிரமத்துக்கு, அவரிடமிருந்து கேவலம் ஒரு 'சபாஷ்' கூடவா கிடைக்கக்கூடாது தனக்கு?- இதை நினைத்ததும், அழுகையே பொத்துக் கொண்டு வந்து விடும் போலிருந்தது அவனுக்கு; முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு திரும்பினான்.

"கவலைப்படாதே! போர்மேன் பொன்னையா செத்ததே உனக்காகத் தானே? அவருடைய பதவிக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள், இங்கே? கவலைப்படாதே தம்பி, கவலைப்படாதே!" என்று அவனுடைய தோள்களில் ஒன்றைப் பற்றி அவனைத் தேற்றினான் கோவிந்தசாமி.

"அவன் என்ன செய்வான், பாவம்!" என்று சொல்லிக்கொண்டே அருணாசலத்தின் இன்னொரு தோளைப் பற்றி, "பதவி, மோகம் ஒருவனைப் பிடித்து விட்டால் அது அவனை என்னவெல்லாம் செய்ய வைத்துவிடுகிறது!" என்று கதிர்வேலும் கோவிந்தசாமியுடன் சேர்ந்து கொண்டு அவனைத் தேற்றாமல் தேற்றினான்!

"என்னை யாரும் தேற்ற வேண்டாம்; எட்டிப் போங்கள்!" என்று அவர்களுடைய கையைப் பிடித்து அப்பால் தள்ளிவிட்டு; 'விடுவிடு' வென்று வெளியே போய்விட்டான் அருணாசலம்.

அவன் தலை மறைந்ததும், 'நரிப் பயல்!' என்று கருவிக்கொண்டே கையோடு கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்றை எடுத்துத் தன் கேஸுக்கு அடியிலேயே உட்கார்ந்து அவிழ்த்தான் கோவிந்தசாமி.

அப்போதுதான் வழக்கமாத் தனக்குப் பக்கத்தில் உட்காரும் கதிர்வேலு அங்கே உட்காரவில்லை என்பது அவனுக்குத் தெரிந்தது.