பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதவி

449

"அந்த நாகரிகத்திற்கு இந்த அநாகரிகம் ஒன்றும் கெட்டுப் போய்விடாது; நீ சாப்பிடு!" என்றான் கோவிந்தசாமி.

இருவரும் இடம் மாறி எதிரும் புதிருமாக உட்கார்ந்தார்கள்; ஆளுக்கு நாலு கவளம் எடுத்து விழுங்கிவிட்டு வெளியே வந்தார்கள்.

"உனக்குத் தெரியுமா? அடுத்த முதல் தேதியிலிருந்து நம் அனைவரையும் மாதச் சம்பளத்துக்கு அமர்த்திக்கொண்டு விடப் போகிறார்களாம்" என்றான் கோவிந்தசாமி.

"ஏனாம்?" என்று கதிர்வேலு கேட்டான்.

"மெஷின் ஸெக்ஷனுக்கு வேலை குறைவாகவும், கம்போஸிங் ஸெக்ஷனுக்கு வேலை அதிகமாகவும் இருப்பதால்!"

"அதனால் என்ன?"

"இத்தனை வாரங்களாகப் பத்துப் பன்னிரண்டு என்று கூலி வாங்கிக்கொண்டிருந்த நாம், இந்த வாரம் இருபது ரூபாய் வாங்கிவிடவில்லையா, அது முதலாளிக்குப் பிடிக்கவில்லை"

"அப்படியானால் கம்போஸிட்டர்கள் 'பெர்மெனெண்ட்' ஆகும்போது, 'மெஷின் மென்'களெல்லாம் 'டெம்பரரி' யாகிவிடுவார்களா, என்ன?"

"ஆனாலும் ஆவார்கள், யார் கண்டது?"

"அநேகமாக அருணாசலம்தான் நமக்கெல்லாம் போர்மேனாக நியமிக்கப்படுவான், இல்லையா?" என்று கதிர்வேலு கேட்டான்.

"அவன் என்னமோ அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்; முதலாளி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ?" என்றான் கோவிந்தசாமி.

"நினைப்பதென்ன?-அவரும் அநேகமாக யாராவது ஓர் ‘ஆமாம் சாமி'யைத்தான் தேடிப் பிடிப்பார்; அதற்கு நம் அருணாசலம்தான் லாயக்கு!"

"அவருக்குத் தெரியாது, வேறு எவனைப் பிடித்துப் போட்டாலும் அவனும் உடனே 'ஆமாம் சாமி' யாகிவிடுவான் என்று!"

"இதனால் என்ன ஆகிறது, தெரியுமா?- திறமைக்கு இடம் இல்லாமற் போய்விடுகிறது!"

வி.க. -29