பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

454

விந்தன் கதைகள்

"அப்புறம் போக்குவரவு சௌகரியத்துக்காக உங்களுக்கு ஒரு 'ஸைக்கிள்' வாங்கித் தருகிறேன் என்று சொன்னார் பாருங்கள், அதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. உங்களுடைய அந்தஸ்துக்குக் கேவலம் ஒரு 'ஸ்கூட்டர்' கூடவா வாங்கிக் கொடுக்கக் கூடாது?"

'கொடுக்கலாம் போலிருக்கிறதே?' என்று நினைத்தான் கதிர்வேலு; ஆனால் அதையும் அவன் வெளியே சொல்லவில்லை.

"சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளக் கூடாது - இனி உங்களுடைய அந்தஸ்தை நீங்கள் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நேற்று வரை நீங்கள் எந்தச் சக்தியும் இல்லாத எக்ஸ்ட்ரா கம்போஸிட்டராக இருந்திருக்கலாம்-இன்றோ நீங்கள் போர்மேன்; எல்லாச்சக்தியும் வாய்ந்த போர்மேன். அவர்தான் சொல்லிவிட்டாரே, நீங்கள் விரும்பினால் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம்; விரும்பாவிட்டால் யாரை வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று!- அப்புறம் என்ன, முதலில் உங்களைவிடத் திறமைசாலிகள் வேறு யாராவது இங்கே இருந்தால் அவர்களை ஈவிரக்கமின்றி வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்; அப்போதுதான் உங்களுடைய பதவி நிலைக்கும். அடுத்தாற்போல் உங்களை இனி யாராவது, 'வாடா, போடா' என்று மரியாதைக் குறைவாகப் பேசினால் அவர்களையும் தயவு தாட்சண்யமின்றி வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்; அப்போதுதான் உங்களுடைய அந்தஸ்து பரிமளிக்கும்"

'அனுப்பவேண்டியதுதான்; தன்னுடைய பதவிக்கு யார் பங்கம் விளைவித்தாலும் சரி, அவர்களை உடனே வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்!' என்று சொல்ல நினைத்தான் அவன்; ஆனால் சொல்லவில்லை.

இத்தனைக்கும் மௌனம் சாதித்த பிறகு இனி பொறுப்பானேன் என்று, "ஆமாம், அவர் சொன்ன அந்த ஆறு பேர்-அந்த ஆறில் 'நமக்'காக ஒன்றைத் தள்ளிவிட்டால் ஐந்து பேர், 'யார், யார்' என்று தீர்மானித்து விட்டீர்களா, நீங்கள்?" என்று மெல்ல விஷயத்துக்கு வந்தான் அருணாசலம், அந்த 'நமக்'கில் தன்னையும் அவனையும் மட்டுமே சேர்த்துக் கொண்டு!

"அதெல்லாம் தீர்மானித்தாகி விட்டது; என்னுடைய மேஜைக்குச் சென்றதும் எழுதி அனுப்ப வேண்டியதுதான் பாக்கி"' என்றான் கதிர்வேலு.