பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவிஞர் ஒன்பாற் சுவையார்

விஞர் ஒன்பாற் சுவையாரை உங்களுக்குத் தெரியுமோ? அபசாரம், அபசாரம்/- "ஞாயிற்றை ஞாலத்துக்கு அறிமுகப் படுத்துவார் உண்டோ, உண்டோ?" என் அன்னார், என்னை ஆயிரமாயிரம் முறை இடித்துரைத்திருந்தும், அத்தகு பெரியாரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தத் துணிந்தேனே, என்னே என் அறியாமை! என்னே என் அறியாமை!

இந்த அறியாமை காரணமாக அன்னாரிடம் ஓர் ஐயப்பாட்டைக் கடாவி, நான் பட்ட பாடு -அப்பப்பா! கொடிது, கொடிது! கவிஞர் பெருமானின் சீற்றம் கொடிது, கொடிது!

இத்தனைக்கும் தான் அப்படியொன்றும் கேட்டு விடவில்லை. "ஆனானப்பட்ட கம்பனேதன்னைத்தானே 'கவிஞன்' என்று அழைத்துக் கொள்ளாத போது, நீங்கள் ஏன் உங்களை நீங்களே 'கவிஞர்' என்று அழைத்துக் கொள்கிறீர்கள்?" என்றுதான் கேட்டேன் அவ்வளவுதான்; "பாலர் பாடம் படித்திருக்கிறீரா? இல்லை, நீர் பாலர் பாடமாவது படித்திருக்கிறீரா என்று கேட்கிறேன்!" என்று அவன் என்மேல் சீறிப் பாய ஆரம்பித்துவிட்டார். "அதில் என்ன தெரிய வேண்டும். உங்களுக்கு? தெரியாவிட்டால் கேளுங்கள், சொல்கிறேன்!" என்றேன் நான், அடக்க ஒடுக்கமாக.

"நன்று; நவிலும்? 'அ' என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?"

"அணிலின் படம் போட்டிருக்கிறது."

"அதற்குக் கீழே?"

"அணில் என்று எழுத்தில் போட்டிருக்கிறது!"

"நன்று; 'ஆ' என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?"

"ஆட்டின் படம் போட்டிருக்கிறது!"

"அதற்குக் கீழே?"

"'ஆடு' என்று எழுத்தால் போட்டிருக்கிறது"