பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் ஒன்பாற் சுவையார்

461

என்னே கொடுமை, என்னே கொடுமை! ‘வடைத் துணை' இல்லையென்றாலும் 'சட்டினித் துணை' யாவது வேண்டாவோ, இட்டிலிக்கு?

ஒன்பாற்சுவையார் சிந்தனை வயப்பட்டார்.

இரண்டு இட்டிலிகளுக்கு அருள் பாலித்த அம்மையார், கொஞ்சம் சட்டினிக்கும் அருள் பாலித்திருக்கக் கூடாதோ?

இப்படி எண்ணியதுதான் தாமதம், உடனே பிறந்தது உள்ளத்தை நெருப்பில்லாமலே உருக வைக்கும் ஒரு சோகக் கவிதை:

"வேதனை, வேதனை, வேதனை
வேதனை போயிற்
சோதனை, சோதனை, சோதனை"

ஆனால்? - வேதனையையும் சோதனையையும் வெளியிட்டு என்ன பயன்? - பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் அம்மையாரின் கவனத்துக்குச் சட்டினியன்றோ வரவேண்டும்?

மீண்டும் சிந்தனை வயப்பட்டார் ஒன்பாற்சுவையார்- உதித்தது, உதித்தே விட்டது. பாடினார்; தொடையையும் -கையையுமே பக்க வாத்தியங்களாகக் கொண்டு பாடினார்;

"இட்லி, இட்லி, இட்லி!
இட்லிக்கு வேண்டும்
சட்னி, சட்னி, சட்னி!"

அவ்வளவுதான்; அந்தத் தெரு வழியே 'விர்' ரென்று போய்க்கொண்டிருந்த ஒரு கார்தம் வீட்டு வாசலில் 'டக்'கென்று நின்ற சத்தமும், கதவைத் திறந்து மூடும் சத்தமும், அவற்றைத் தொடர்ந்து, "வொண்டர்புல், மாஸ்டர் பீஸ்! இப்படிப் பாடினால் எந்த ஸாங்தான் ஹிட் ஸாங்காகாது? ஆஹா, ஆஹாஹா!" என்ற பாராட்டுரையும் கவிஞர் பெருமானின் காதில் விழுந்தன. 'சட்டினி இந்த உருவத்திலும் வருமோ?' என்ற ஐயப்பாட்டுடன் அன்னார் தலை நிமிர, "என்னைத் தெரியாவிட்டாலும் என் பெயரையாவது நீங்கள் கேள்விப்பட் டிருப்பீர்கள். நான்தான் வானா மூனா; ஜாலி பிக்சர்ஸ் ஓனர்!" என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தார் வலம்புரி முத்தையா.

ஒன்றும் புரியவில்லை, ஒன்பாற்சுவையாருக்கு: 'உட்காருங்கள்!' என்று சொல்லக்கூட முடியாமல் விழித்த கண் விழித்தபடி நின்றார்.