பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

462

விந்தன் கதைகள்

அதற்குள் 'செக்' புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, "தங்கள் பெயர்?" என்றார் படாதிபதி.

"ஒன்பாற்சுவையார்" என்றார் கவிஞர், தட்டுத் தடுமாறி.

"ஓஹோ, நவரஸமும் பாட வரும்போலிருக்கிறது, தங்களுக்கு!" என்று சொல்லிக்கொண்டே 'செக்'கில் ஏதோ எழுதி, "இந்தாருங்கள், ரூபா ஐந்நூற்றொன்றுக்குச் செக் இது; இதை முன் பணமாக வைத்துக்கொள்ளுங்கள். நாளைக் காலை பத்து மணிக்கு வண்டி அனுப்பி வைக்கிறேன்; கம்பெனிக்கு வாருங்கள்!" என்றார் வானா மூனா.

கை நடுங்க அந்தச் செக்கைக் கவிஞர்பிரான் வாங்கிக் கொண்டதுதான் தாமதம்; 'விர்'ரென்று அந்த வீட்டை விட்டு வெளியே வந்தார் வலம்புரி முத்தையா, ஆனால்.......

இம்முறை கதவைத் திறந்து மூடும் சத்தமும், கார் கிளம்பும் சத்தமும் கவிஞர் பெருமானின் காதில் விழவில்லை. காரணம், தமது வாழ்நாளிலேயே முதன் முறையாக ரூபாய் ஐந்நூற்றொன்றுக்குச் செக்கைக் கண்ட அதிர்ச்சியில் அன்னார் மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டதுதான்!

"துபோது போது யாம் எங்குள்ளோம்?" மூர்ச்சை தெளிந்த பின் கவிஞர்பிரான் கேட்ட முதல் கேள்வி இது.

"என் மடியில்!"

முகம் சிவக்க இன்பவல்லி அம்மையார் இறுத்த முதல் பதில்

அவ்வளவுதான்; திடுக்கிட்டெழுந்தார் ஒன்பாற் சுவையார். வியப்பு! பெரு வியப்பு!-இரண்டு இட்டிலியோடு இன்னும் இரண்டு இட்டிலி; இரண்டு மசால் வடை; சட்டினி; சாம்பார்; மிளகாய்ப் பொடி; நெய்!!!

அடி சக்கை! இவ்வளவும் தமக்கா, இந்தச் செக்குக்கா?

'எதற்காயிருந்தால் என்ன?' என்று சட்டையின் கையைத் தள்ளிவிட்டுக் கொண்டு, கிடைத்தற் கரிய அந்தப் பேற்றை 'ஒரு கை' பார்த்தார் கவிஞர்.