பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணமே! அன்புக்கும் அதுவே ஆதாரம்

477

வண்டியிலிருந்த ஒரு சிறு சிதார் வாத்தியத்தை எடுத்து 'டொய்ங், டொய்ங்' என்று வாசித்துக் காட்டியது அது.

"இது?" என்று கேட்டது இது.

"இதுவும் என் அப்பா வாங்கிக் கொடுத்ததுதான்!"

"அதுவும் அப்பா வாங்கிக் கொடுத்தார்; இதுவும் அப்பா வாங்கிக் கொடுத்தார்-ஆச்சரியம் தாங்கவில்லை, வெந்த சோற்றைத் தவிர வேறொன்றையும் காணாத குச்சு வீட்டுக் குழந்தைக்கு; அவன் அணிந்திருந்த 'சூட், பூட்' ஆகியவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டி, 'இது, இது?' என்று கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த மச்சு வீட்டுக் குழந்தையோ எல்லாவற்றுக்கும் 'என் அப்பா வாங்கிக் கொடுத்தார், என் அப்பா வாங்கிக் கொடுத்தார்' என்ற பதிலையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தது.

கடைசியில், "உன்னுடைய அப்பா உனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார்?" என்று கேட்டது அது.

"எனக்கா வந்து ....... வந்து ........"

மேலே ஒன்றும் சொல்ல முடியவில்லை இதால்; விழித்தது.

அவன் மறுபடியும் சிரித்தான்.

வெட்கமாகப் போய்விட்டது இவளுக்கு. ஓடினாள்- 'ஒரு சிட்டிகை ஓசிப் பொடி கொடுக்க எந்தப் புண்ணியவானாவது இந்தப் பக்கம் வர மாட்டானா?' என்று வழி மேல் விழி வைத்துக் கொண்டிருந்த தாத்தாவிடம்.

"தாத்தா, தாத்தா! என் அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், தாத்தா?"

தாத்தாவின் காதில் இது விழவில்லை, அவருடைய கவனமெல்லாம் ஓசிப் பொடியின்மேலேயே இருந்ததால்!

அவரைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, "தாத்தா, தாத்தா! என் அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், தாத்தா?" என்று மறுபடியும் கேட்டாள் அவள்.

"உன் தலை!" என்றார் தாத்தா மிக்க வெறுப்புடன்.

குழந்தைக்கு ஆனந்தம் தாங்கவில்லை; 'குதி, குதி' என்று குதித்துக் கொண்டே ஓடியது அவனிடம்.