பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

488

விந்தன் கதைகள்

விடப்பா விடு; இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமலே நூலை விடு! - மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் மாந்தோப்புக்குப் போய்விடவேண்டும் என்று சொல்லி என்னை அங்கே காக்க வைத்துவிட்டு, இங்கே நீ டீலா விட்டுக் கொண்டிருக்கிறாய், டீல்?. உனக்குப் பின்னால் உருண்டோடி வரும் நூலுருண்டையை நான் அறுத்து எடுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்னை நீ என்ன செய்வாயாம்?

அதுதான் சரி; அதுதான் தன்னைக் காக்க வைத்ததற்குச் சரியான தண்டனை!

டேவிட் இப்படி நினைத்தானோ இல்லையோ, எடுத்தான் பிளேடை; அறுத்தான் உருண்டையை; பிடித்தான் ஓட்டம்!

அதே சமயத்தில் கையை விட்டுக் காற்றாடி போன ஆத்திரத்தோடு திரும்பினான் பீட்டர்; நூலுருண்டையுடன் டேவிட் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது - என்னதுணிச்சல் இந்தப் பயலுக்கு, என்னை இப்படி அவமானப் படுத்த? -அவ்வளவுதான்; ஊர்க்குருவியைப் பருந்து துரத்துவதுபோல் துரத்தினான் அவன்.

கடற்கரையில் பிடித்த ஓட்டத்தை மாந்தோப்பின் வாசலை அடைந்த பிறகு தான் நிறுத்தினான் டேவிட்.

"இப்படிக் கூடச் செய்யலாமா, நீ?" என்று பீட்டர் கையை ஓங்கினான்.

"இல்லாவிட்டால் ஒரு மணிக்கே இங்கு வந்திருக்கவேண்டிய நாம் மூன்று மணிக்காவது வந்திருப்போமா?" என்று சமாளித்தான் டேவிட்.

அவ்வளவுதான்; "நல்ல வேலை செய்தாய், நான் மறந்தே போய்விட்டேன்!" என்று தன் கோபத்தை மறந்து, பீட்டர் அவனைப் பாராட்ட ஆரம்பித்துவிட்டான்!

அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? இருவரும் ஒரே தாவில் மதிற்சுவரின்மேல் ஏறி உட்கார்ந்தனர்.

"முதலில் காவற்காரன் எங்கே இருக்கிறான் என்று பார்?" என்றான் பீட்டர், தன்னுடைய கண்ணோட்டத்தையும் தோப்புக்குள் செலுத்தியபடி.

"அதோ, அந்த மரத்தடியைப் பார்; அவன் தூங்குகிறான் போலிருக்கிறது!" என்றான் டேவிட்.