பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரு திருடர்கள்

487

"ஓஹோ, சாப்பிட்ட களைப்பிலே இளைப்பாறுகிறார் போலிருக்கிறது! இளைப்பாறாட்டும், இளைப்பாறட்டும்; நன்றாக இளைப்பாறட்டும்!" என்று சொல்லிக்கொண்டே, கைக்கு எட்டிய தூரத்திலிருந்த இரண்டு மாங்காய்களைப் பறித்துக் கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு தோப்புக்குள் குதித்தான் பீட்டர்; அவனைத் தொடர்ந்து டேவிட்டும் குதித்தான்.

'என்ன சத்தம்?' என்று படுத்தபடி கேட்டுக் கொண்டே, தலையைத் தூக்கிப் பார்த்தான் காவற்காரன்.

'வந்தது ஆபத்து!' என்று நினைத்த டேவிட் ஒரே தாவாகத் தாவி மதில்மேல் ஏறப்போனான்; 'உஸ்!' என்று அவனை இழுத்து ஒருமரத்துக்குப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு, கால் சட்டைப் பைக்குள் இருந்த மாங்காய்கள் இரண்டையும் எடுத்து ஒன்றன்பின் ஒன்றாகக் காவற்காரனுக்கு முன்னால் போய் விழுமாறு உயரத் தூக்கி எறிந்தான் பீட்டர். "ஓ, மாங்காயா? விழட்டும். விழட்டும்!" என்று மீண்டும் தலையைக் கீழே போட்டுக் கண்ணையும் மூடிக்கொண்டுவிட்டான் அவன்!

"தாலேலோ, தாலேலோ!" என்று மெல்ல அவனுக்குத் தாலாட்டிக்கொண்டே டேவிட்டின் கையைப் பற்றிய வண்ணம் அடிமேல் அடி எடுத்து வைத்தான் பீட்டர். "ஒரு மணிக்கெல்லாம் வந்திருந்தால் இந்தத் தொல்லையெல்லாம் இருந்திருக்காது!" என்று டேவிட் முணுமுணுத்தான்.

பீட்டர் அதைப் பொருட்படுத்தாமல் காவற்காரனைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் வாய்க்குள் விரலை மடக்கி வைத்து ஒரு நீண்ட கீழ்க்கை அடித்தான். "என்னடா இது! உடம்பு கிடம்பு ஊறுகிறதா என்ன, உனக்கு?" என்று பதறினான் டேவிட்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை; அபாயம் நீங்கி விட்டதற்கு அறிகுறி! நீ ஏறு அந்த மரத்தின் மேல்; நான் இந்த மரத்தின்மேல் ஏறுகிறேன்!" என்றான் பீட்டர்.

ஆளுக்கு ஒரு மரத்தின்மேல் ஏறிய இருவரும் அப்படியே பல மரங்களுக்குத் தாவி, வேண்டிய மட்டும் மாங்காய்களைப் பறித்துச் சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள்.

"நாம் திருடினால் தோட்டக்காரர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று இப்பொழுதுதான் தெரிகிறது!" என்றான் பீட்டர்.

"ஏனாம்?" என்று கேட்டான் டேவிட்.