பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு

335

"என்ன, லக்ஷ்மி?" என்று விசாரிப்பான் நாராயணன்.

"ஒன்றுமில்லை!" என்று எதையோ மறைக்கப் பார்ப்பாள் அவள்.

"என்னதான் சொல்லேன்?" என்று அவளைத் தூக்கி உட்கார வைப்பான் அவன்.

"கொஞ்சம் மயக்கமாயிருக்கிறது; அவ்வளவு தான்! சிறிது நேரம் படுத்து எழுந்தால் சரியாய்ப் போய்விடும்" என்று சொல்லி விட்டு 'சட்'டென்று படுத்துக் கொள்வாள் அவள்.

"சமையல் செய்வதில் சகதர்மிணிக்குநான்
சளைப்பில்லை காணென்று கும்மியடி!"

என்று பாடிக்கொண்டே சமையலறைக்குள் நுழைவான் நாராயணன். அவனே வெந்நீர் போட்டுக் குளித்து விடுவான்: அவனே சமைத்தும் சாப்பிட்டு விடுவான்; கடைசியில் லக்ஷ்மியையும் அழைப்பான்; சாப்பிடுவதற்கு!

"பழிக்குப் பழிவாங்க இதுதான் சரியான சந்தர்ப்பம்; நம் சமையலின் தராதரத்தைப் பற்றி அவர் என்னவெல்லாம் சொல்வாரோ, அதையெல்லாம் அப்படியே இப்போது திருப்பிச் சொல்லிவிட வேண்டும்" என்று எண்ணிக் கொண்டே எழுந்திருப்பாள் லக்ஷ்மி. ஆனால் ஒரு வாய் சாதத்தை எடுத்து வைத்ததும் அவளுக்குக் குமட்டும்; எழுந்து வாசலுக்கு ஓடி விடுவாள்.

"என்ன, லக்ஷ்மி? நான் செய்த சமையலுக்கு நீ கொடுக்கும் 'ஸர்டிபிகேட்' இதுதானா!" என்று கேட்டு விட்டுச் சிரிப்பான் நாராயணன். லக்ஷ்மியும் அவனுடைய சிரிப்பில் கலந்து கொள்வாள்.

இவை மட்டுமா? - நாராயணன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்து வந்த லக்ஷ்மியிடம் இப்பொழுது எத்தனை மாறுதல்!

ஒரு நாள் வேலைக்குப் போக கிளம்பிய நாராயணன் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு வாசலில் நின்று "லக்ஷ்மி! என் மேஜையின் மேல் பேனாவை மறந்து வைத்து விட்டேன்; அதைக் கொஞ்சம் கொண்டு வாயேன்!" என்றான்.

அதற்கு லக்ஷ்மி அளித்த பதில் அவனைத் தூக்கிவாரிப் போடுவாதாயிருந்தது; "எனக்கு உடம்பை என்னவோ செய்கிறது; நீங்களே வந்து எடுத்துக் கொண்டு போங்கள்!" என்றாள் அவள்.