பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



488

விந்தன் கதைகள்

"திருடுவது நமக்கு லாபமாயும் அவர்களுக்கு நஷ்டமாயும் இருப்பதால்!”

"மகா புத்திசாலிடா, நீ! வாவா, சீக்கிரம் வா!"

“கொஞ்சம் பொறு, 'மாங்காய் தின்றால் பல் கூசும்' என்று நாம் படித்திருக்கிறோம், இல்லையா? அது மெய்யா, பொய்யா என்று பரீட்சித்துப் பார்த்துவிடுகிறேன்!" என்று சொல்லிக்கொண்டே பீட்டர் ஒரு மாங்காயை எடுத்துக் கடித்துப் பார்த்து விட்டு, "பொய், சுத்தப் பொய்! யாரோ ஒரு மாந்தோப்புக்குச் சொந்தக்காரன் நம்மை ஏமாற்றுவதற்காக அப்படிச் சொல்லி யிருக்கிறான்!” என்றான் 'குதி, குதி' என்று குதித்துக்கொண்டே.

"இந்தப் பரீட்சைகளையெல்லாம் வெளியே போய் வைத்துக்கொள்ளக் கூடாதாக்கும்?" என்று டேவிட் வழக்கம்போல் முணுமுணுத்தான்.

"அட பயந்தாங்கொள்ளி பெரிய மனிதர்களின் சுய சரிதைகள் எதையாவது படித்திருக்கிறாயா, நீ? அவற்றில் திருடுவதுகூட அவர்களுடைய பெருமைகளில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது!” என்றான் பீட்டர்.

"இருக்கலாம்; திருடுவதுகூடப் பெரிய மனிதர்களுக்குப் பெருமையளிப்பதாயிருக்கலாம். நாமெல்லாம் சிறிய மனிதர்கள்தானே? நீ வா, சீக்கிரம்!" என்று டேவிட் அவனை அவசரப்படுத்தினான்.

இந்தச்சமயத்தில், 'ஆங், ஆங்!' என்ற ஹாரன் ஒலி எங்கிருந்தோ கேட்கவே, இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். மூடியிருந்த அந்தத் தோப்பின் கேட்டருகே ஒரு கார் வந்து நின்று காவற்காரனை அழைத்துக் கொண்டிருந்தது. ‘கேட்'டைத் திறப்பதற்காக!

அதைப் பார்த்தானோ இல்லையோ, "நான் செத்தேன்!” என்று அலறினான் டேவிட்.

சட்டென்று அவனைத் தொட்டுப்பார்த்துவிட்டு, "இல்லை; நீ இன்னும் சாகவில்லை!" என்று பீட்டர் அவனைத் தேற்றினான்

அதற்குள் தூக்கம் கலைந்து எழுந்துவிட்ட காவற்காரன் அவசர அவசரமாகக் 'கேட்'டைத் திறந்துவிட்டு, "திருட்டுப் பயல்களா, அகப்பட்டுக் கொண்டீர்களா?" என்று கத்திக்கொண்டே அவர்களை நோக்கித் திரும்பினான்.