பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரு திருடர்கள்

489

"பார்த்து ஒடிவா, தாத்தா! ஏதாவது தடுக்கிக்கிடுக்கி விழுந்துடப் போறே!" என்று அவனை எச்சரித்துக்கொண்டே பீட்டரும் திரும்பினான்-ஆனால் என்ன ஆச்சரியம், டேவிட்டைக் காணோம்!

அட பாவி! நீ எங்கே போய்விட்டாய்?-சுற்று முற்றும் பார்த்தான் பீட்டர்-காணோம்; காணவே காணோம்!

'இனிமேல் இங்கிருந்தால் ஆபத்து!’ என்பதை உணர்ந்த பீட்டர் ஓடினான். ஆனால்........

அவன் எச்சரித்ததுபோல் காவற்காரன் தடுக்கி விழவில்லை.அவனே தடுக்கி விழுந்துவிட்டான்!

அதுதான் சமயமென்று காவற்காரன் அவனைத் தூக்கி நிறுத்தி மரத்தோடு மரமாகச் சேர்த்துக் கட்டப் போனபோது, “டேடேடேய்! இருடா, இருடா!" என்று கத்திக்கொண்டே காரை விட்டு இறங்கி, அவசர அவசரமாக ஓடி வந்தார் மாந்தோப்பின் முதலாளி மாணிக்கவாசகம்.

"ஏன், பேசாமல் இவனைப் போலீஸில் ஒப்படைத்துவிடலாம் என்கிறீர்களா?" என்று கேட்டுக் கொண்டே திரும்பினான் காவற்காரன்.

"போடா, முட்டாள்! தம்பியைத் தெரியவில்லையா, உனக்கு? நமது கலெக்டர் ஐயாவின் மகன்டா, நமது கலெக்டர் ஐயாவின் மகன்!”

"சரிதான், நான் அப்பொழுதே நினைத்தேன்....... "

“என்ன நினைத்தாய்?"

"தம்பி திருடியிருக்காது-தம்பியோடு ஒரு பிச்சைக்காரப் பயல் வந்திருந்தானே, அவன்தான் திருடியிருப்பான் என்று!"

"யார் அந்தப் பிச்சைக்காரப் பயல்?”

“பியூன் பெர்னாண்டோ இல்லை, அவன் மகன்"

"யார் அந்தப் பியூன் பெர்னாண்டோ?-கலெக்டர் ஆபீசுக்குப் போகும்போதெல்லாம் கழுத்தைச் சொறிந்து கொண்டு வந்து நிற்பானே, அவனா?"

"ஆமாம், அவனேதான்!" என்றான் காவற்காரன்.

"அந்த மாதிரிப் பயல்களோடெல்லாம் நீ சேரக் கூடாது, தம்பி! நிசமாச் சொல்லு, அவன்தானே இந்த மாங்காயைத் திருடி உன்னிடம்