பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு

337

நாராயணன் அவளைப் பின் தொடர்ந்து சென்று "அப்படியானால் அடுத்த மாதம் உன்னை அழைத்துக் கொண்டு போகும்படி அத்தைக்குக் கடிதம் எழுதுகிறேன்!" என்றான்.

தலை குனிந்த வண்ணம் முந்தானையின் ஒரு மூலையை முறுக்கி விட்டுக் கொண்டே, "அதற்குள் என்னை அங்கே அனுப்பி வைத்துவிட்டு, நீங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்களாம்?" என்று கேட்டாள் லக்ஷ்மி.

"நான் எக்கேடாவது கெட்டுப் போகிறேன். என் சுகத்திற்காக உன் கஷ்டத்தை நீ வேண்டுமானால் சகித்துக் கொண்டிருக்கலாம்; என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது!"

"ரொம்ப அழகாய்த்தானிருக்கிறது. என் சுகத்திற்காக உங்கள் கஷ்டத்தை மட்டும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியுமா?"

"இந்தப் பிடிவாதமெல்லாம் வேண்டாம்; நீ இல்லாமலே என்னால் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்ள முடியும்! - நான் சொல்கிறபடி, நீ போய் உடம்பைப் பார்த்துக் கொண்டு, வா?"

"ஆமாம், உங்கள் சமையலும் நீங்களும்!"

"சரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறேன்!"

"ஐயோ! உங்களுக்கு ஹோட்டல் சாப்பாடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்...?"

அதற்கு மேல் நாராயணனால் பொறுக்க முடியவில்லை. "அதெல்லாம் என் இஷ்டத்தைப் பொறுத்தது. அடுத்த மாதம் நீ உன் அம்மாவுடன் போய்த்தான் ஆக வேண்டும்!" என்று உச்சஸ்தாயில் இரைந்தான்.

காதைப் பொத்திக் கொண்ட லக்ஷ்மி, "வாயையும் பொத்திக் கொண்டாள். இல்லாத சந்தேகமெல்லாம் வந்துவிட்டது அவளுக்கு! - அத்துடன் எப்பொழுதோ நிகழ்ந்த சில சம்பவங்கள், கேட்ட பேச்சுக்கள், உலாவிய வதந்திகள் எல்லாம் அவளுடைய ஞாபகத்துக்கு வந்து விட்டன - அவ்வளவுதான் அவளுடைய அன்புள்ளம் சலசலத்தது. ஆத்திரம் அவளை ஆட்கொண்டு விட்டது!

பேதைப் பெண் பின் வருமாறு எண்ணமிட்டாள்;

"இவர் ஏன் நம்மை இப்படி ஒரேயடியாய்த் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்? ஒருவேளை நாம் இல்லாத சமயத்தில் வேறு எவளையாவது....

வி.க.-22