பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாளை நம்முடையதே

513

"கவலைப்படாதே, நண்பா, நாளை நம்முடையது!"என்றான் வைகுந்தன்.

இந்தச் சமயத்தில் யாரையோ யாரோ 'பளார்' என்று அறையும் சத்தம் அவர்களின் காதில் விழுந்தது; இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்; அடித்தவர் கந்தையா; அழுதவள் ஒரு சிறுமி.

"ஒரு தரம் வாங்கிக் கொண்டு போன கஞ்சியை எங்கேயோ வைத்துவிட்டு, இன்னொரு தரமாக வந்து இங்கே நிற்கிறாய்? போ, அப்படி!"என்று அவளைப் பிடித்து அப்பால் தள்ளினார் அவர்.

கீழே விழுந்த அவள் தட்டுத்தடுமாறி எழுந்து "அது எனக்கு ஐயா! இது என் அம்மாவுக்கு" என்றாள் தேம்பிக் கொண்டே.

"ஏன் அவளுக்கென்ன கேடு?"

"காய்ச்சல் ஐயா! எழுந்து வரமுடியவில்லை, ஐயா!"

"சீ, நாயே! நான் ஏதோ ஒர் இதுக்குக் கஞ்சி வார்த்தால் அம்மாவுக்கு வேண்டுமாம், ஆட்டுக்குட்டிக்கு வேண்டுமாம்! போ, போ!போகிறாயா, இல்லையா?”

"அம்மாவை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி ஐயா கஞ்சி குடிப்பேன்?"

"குடிக்காவிட்டால் நீயும் சாவு; உன் அம்மாவும் சாகட்டும்! எனக்கென்ன வந்தது!”

அவ்வளவுதான்; "சரி, ஐயா! நாங்கள் சாகிறோம்; நீங்கள் வாழுங்கள்!" என்று அதுவரை மறைத்து வைத்திருந்த கஞ்சியை எடுத்து அவருக்கு முன்னாலிருந்த ஏனத்தில் கொட்டிவிட்டு அவள் திரும்பினாள்.

"அவ்வளவு திமிரா உனக்கு?"என்று அவளை இழுத்து நிறுத்தி இன்னொரு முறை அறைந்தார் அவர்.

"ஐயோ, அம்மா!" எனறு அலறித்துடித்தபடி அவள் ஓடினாள்.

தனக்குத் தெரிந்த அந்தச் சிறுமியை அநுதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வைகுந்தனை நோக்கி, "ஆமாம், ஏதோ ஓர் இதுக்குக் கஞ்சி வார்ப்பதாகச் சொல்கிறாரே, அந்த இது என்ன இது?" என்று விளக்கம் கோரினான் கைலாசம்.

வி.க. -33