பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

514

விந்தன் கதைகள்

"அது தானே எனக்கும் தெரியவில்லை!"என்று கையை விரித்தான் வைகுந்தன்.

அதற்குள் தங்களுடைய முறை வந்துவிடவே, அவர்கள் இருவரும் கப்பரையை ஏந்திக் கஞ்சியை வாங்கிக் கொண்டு திரும்பினார்கள்.

“என்ன இருந்தாலும் ஏழைக்குக் கோபம் வரவே கூடாது; நீ என்ன சொல்கிறாய்?" என்றான் கைலாசம்.

"ஆமாம், ஆமாம். வரக்கூடாது. வரவே கூடாது. அப்படி வந்தால் அது கூடப் பணக்காரனுக்குத் தான் வர வேண்டும்!"என்று ஒத்து ஊதினான் வைகுந்தன்.

"இதற்குத் தான் ஏழைக்குக் கோபம் வந்தால் அது அவன் வாழ்வைக் கெடுக்கும்! என்று ஏற்கனவே நம் பெரியோர் நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். இப்போது அந்தப் பெண்ணின் விஷயத்தில் அது சரியாகி விட்டதல்லவா?”

"அது எப்படிச் சரியாகும்? ஒரு வேளை அவர்களும் கந்தையாவின் கட்சியோ, என்னமோ?"

"இருக்கலாம் நண்பா, இருக்கலாம். நீ வா, நாமாவது அந்தப் பெண்ணின்கட்சியில் சேரலாம்" என்று கைலாசம் சிறுமியைத் தேடிக் கொண்டு போய்த்தன்னிடமிருந்த கஞ்சியை அவளிடம் கொடுத்தான். வைகுந்தன் அவள் தாயாருக்குக் கொடுத்தான்.

அங்கிருந்து திரும்பியதும் "இன்று ஐந்தாவது நாள்!" என்றான் கைலாசம்.

“எதற்கு?"என்று கேட்டான் வைகுந்தன்.

"பட்டினிச் சுதந்திரத்துக்குத்தான்!"

"கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!"

இதைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போன கைலாசத்துக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, "அது சரி நண்பா, நாளை நம்முடையதானால் இன்று யாருடையது?"என்று கேட்டான்.