பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருந்திய திருமணம்


கையிலிருந்த மூக்குக் கண்ணாடியைத் துடைத்துக் காதில் மாட்டிக் கொண்டு, சாளரத்துக்குக் கீழே விழுந்து கிடந்த செய்தித்தாளை எடுத்துப் பிரித்தார் சிதம்பரம்.

"இந்தக் கதையைக் கேட்டீர்களா?" என்று அங்கலாய்த்துக் கொண்டே அவரை நோக்கி வந்தாள்.அவருடைய மனைவி சிவகாமி.

"ஊர்க் கதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க உனக்கு நான்தானா கிடைத்தேன்? போய் வேலையைப் பார்!"

"இது ஒன்றும் ஊர்க்கதை இல்லை; உங்கள் வீட்டுக் கதைதான்!”

"அது என்ன கதை?”

"எல்லாம் உங்கள் சிகாமணியின் கதைதான்!"

"அவன் எங்கே இப்பொழுது சிகாமணியாயிருக்கிறான்? அவன்தான் 'முடிமணி'யாய்ப் போய்விட்டானே!"

"முடிமணியா! அது என்ன மணி?"

"அதை வெளியே சொல்லும் அளவுக்கு என்னை இன்னும் வெட்கம் விட்டு விட்டுப் போய்விடல்லை; அவனுடைய தமிழ்ப்பற்று அத்துடனாவது நிற்கிறதே, அதைச் சொல்லு!”

"அதுதான் இல்லை! அந்த முந்திரித் தோட்டம் முத்தையாவின் மகள் முல்லைக்கு "உனக்கேற்ற குட்டிக் சுவர் நான்; எனக்கேற்ற கழுதை நீ!" என்று இவன் காதற் கடிதம் எழுதுகிறானாம், காதற் கடிதம்!”

"சரிதான்; காதற் கடிதத்திலும் 'கருத்துக் குவியலை'க் கொட்டிக் கலக்க ஆரம்பித்துவிட்டான் போலிருக்கிறதே!"

"கருத்துக் குவியலோ, கண்ராவிக் குவியலோ, நமக்கு இருப்பவன் இவன் ஒருவன்தானே? காலா காலத்தில் இவனுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்துவிட்டு மறு வேலை பாருங்கள்!"என்றாள் சிவகாமி,

"உத்தரவு" என்றார் சிதம்பரம்.