பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

விந்தன் கதைகள்

எண்ணம் முடியவில்லை; அதற்குள் கண்ணிர் கரை புரண்டு விட்டது.

"நாராயணன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் பாட்டுக்கு அத்தைக்கு கடிதம் எழுதிப் போட்டு விட்டான். அவளும் வந்தாள்; லக்ஷ்மியை விடாப்பிடியாக அழைத்துக் கொண்டு போனாள்.

எட்டு வருஷ காலம் இணைபிரியாமலிருந்த நாராயணனுக்குத் தனிமையைத் தாங்குவது அசாத்தியமாயிருந்தது. சில சமயம் தன்னை மறந்து "லக்ஷ்மி!"என்று அவன் கத்திவிடுவான். பிறகு, "ஒஹோ! லக்ஷ்மி இங்கே இல்லையா!"என்று தன்னைத் தானே அவன் தேற்றிக் கொண்டு விடுவான்.

அன்று பிரசவத்துக்கு முன் அவளை ஒரு தடவை போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று அவன் உள்ளம் துடியாய்த் துடித்தது. உடனே ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டான்.

ரயிலில் ஏறி உட்கார்ந்ததும், "அவள் எப்படியிருக்கிறாளோ?" என்று ஏங்கிற்று அவன் மனம். அந்த நிலையில் அவனுடன் பிரயாணம் செய்பவர்கள் எல்லோருமே, "அவள் எப்படியிருக்கிறாளோ!" என்று லக்ஷ்மியை நினைத்து ஏங்கவேண்டுமென்பது அவனுடைய எண்ணம் போலும்! - இல்லையென்றால், அவர்கள் பாட்டுக்குத் தங்களுக்குள் பேசிச் சிரிப்பது கூட அவனுக்கு ஏன் பிடிக்காமல் இருக்க வேண்டும்? - அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். ஏழைகளைக் கவனிக்காமல் செல்லும் பணக்காரனைப்போல, சின்னஞ்சிறு ஸ்டேஷன்களைக் கவனிக்காமல் 'மெயில்'சென்று கொண்டிருந்தது. அதைவிட வேகமாக நாராயணனின் மனோரதம் ஓடிக் கொண்டிருந்தது. அவன் ரயிலை விட்டு இறங்கியதும் ஓடோடியும் சென்று பஸ்ஸைப் பிடித்தான். வீட்டை நெருங்கியதும் உள்ளே லக்ஷ்மியும் அவளுடைய அம்மாவும் பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது. "அம்மாடி! அந்த மட்டும் லக்ஷ்மி செளக்கியமாய்த்தான் இருக்கிறாள்" என்று ஆறுதல் அடைந்த வண்ணம், நாராயணன் சற்று நின்று அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டான்.