பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

536

விந்தன் கதைகள்

அவர் நிற்கவில்லை; போய்விட்டார்.

"அட, பாவமே! எதிர்த்த வீட்டுக்காரரிடம் இருக்கும் மனைவியை மீட்பதற்குக்கூடப் போலீஸாரின் உதவியை நாடும் அளவுக்கா இவர் கோழையாக இருக்க வேண்டும்?" என்றான் முருகையன், அனுதாபத்துடன்.

"வாயை மூடு, படித்தவர்கள் எதையும் தெரியாமல் செய்ய மாட்டார்கள்!" என்றான் கண்ணாயிரம் ஆத்திரத்துடன்.

"அது என்னமோ உண்மைதான், அப்பா! அவர்கள் எதையும் தெரிந்து தான் செய்கிறார்களாம்!"

"அப்புறம் என்ன? விடு கதையை; தேடு வக்கீல் வள்ளிநாயகம் வீட்டை!"

அப்போது அந்தத் தெருவின் திருப்பத்திலிருந்து ஒரு வீட்டு முகப்புச் சுவரில் 'வள்ளிநாயகம் பி. ஏ., பி.எல் என்று 'போர்டு' தென்படவே, "இனி தேடவேண்டிய அவசியமில்லை அப்பா! இதோ இருக்கிறது, அவருடைய வீடு!" என்றான் முருகையன்.

உடனே மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு "சாமி சாமி" என்று அந்த வீட்டுக்கு முன்னால் நின்று குரல் கொடுத்தான் கண்ணாயிரம்.

அவ்வளவுதான்; உர்ர்ர்! வள், வள்! வள், வள்! என்று குரைத்துக் கொண்டே அந்த வீட்டு நாய் அவனை நோக்கி ஓடி வந்தது.

'ஒரு வேளை முருகையன் சொன்னது உண்மையாய் யிருக்குமோ?'

இந்த எண்ணத்துடன் தன் மகனைத் திரும்பிப் பார்த்தான் கண்ணாயிரம்.

"இப்பொழுதாவது சந்தேகம் தீர்ந்ததா, உங்களுக்கு? இங்கெல்லாம் நாய்கள்தான் வசிக்கின்றன!" என்றான் முருகையன்.

அதற்குள் அந்த நாயைத் தொடர்ந்து வந்த வேலைக்காரன், "யார் ஐயா, நீங்கள்? உங்களுக்கு இங்கே என்ன வேலை?" என்று எரிந்து விழுந்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் அவனையும், அவனை முந்திக் கொண்டு நின்ற நாயையும் மாறி மாறிப் பார்த்தான் முருகையன் பிறகு, "'குணத்தில் வித்தியாசம் இல்லா விட்டாலும் உருவத்தில் என்னமோ வித்தியாசம் இருக்கத்தான் இருக்கிறது!" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.