பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
"ஆபீஸாப்பியாசம்"

மாதா கோயிலின் மணியோசையிலிருந்து மணி ஒன்பது என்று தெரிந்தால் போதும்; வாத்தியார் வைத்தியலிங்கம் தலைப்பாகையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, “சரி, நான் போகிறேன்!” என்பார்தம் சகதர்மிணியிடம்.

"அபசகுனம் மாதிரி 'போகிறேன், போகிறேன்' என்று சொல்கிறீர்களே? 'போய் வருகிறேன்' என்று சொல்லுங்கள்!"என்று திருத்துவாள் அவள்.

"ஆமாம், நான் போய்விட்டால் உலகமே அஸ்தமித்து விடுமாக்கும்?" என்பார் வாத்தியார் வெறுப்புடன்.

"அதற்கு என்னை ஏன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம்?" என்று தன் மேலாக்கை எடுத்துக் கண்களைத் துடைத்து விட்டுக் கொள்வாள் அவள்.

"அடி, அசடே! நான் மட்டுமா உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன்? நீயுந்தானே என்னைக் கல்யாணம் செய்துகொண்டாய்?" என்று சொல்லி, வராத சிரிப்பை வரவழைத்துக் கொள்வார் வாத்தியார். உடனே அவருடைய சகதர்மிணியின் கோபமும் ஒருவாறு தணிந்து விடும், அவ்வளவுதான்; பள்ளிக்கூடத்தை நோக்கி வாத்தியார் நடையைக் கட்டிவிடுவார்.

வழியெல்லாம் அவருக்குத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் - அவரிடம் படித்தவர்கள் - இப்படி எத்தனையோ பேர் அவரைச் சந்திப்பார்கள். "என்ன, வாத்தியார் வாள்! - நமஸ்காரம் - செளக்கியந்தானே?" என்று கை கூப்பிய வண்ணம் வழக்கமாகக் கேட்கும் அந்த அசட்டுக் கேள்வியைக் கேட்காமல் விடமாட்டார்க்ள்.

"நேற்றுத்தான் வாத்தியார் செளக்கியமாயிருந்தாரே, இன்று அவருடைய செளக்கியத்திற்கு என்ன ஆபத்து வந்துவிட்டிருக்கப் போகிறது!" என்று எண்ணி, அவர்கள் ஒரு நாளாவது சும்மா இருக்க வேண்டுமே? - ஊஹும்!

அப்பாவி வாத்தியார் என்ன செய்வார், பாவம்! - அவரும் அவர்களுக்குச் சளைக்காமல், "செள...க்..கி....ய...ந்... தா....ன்!" என்று முகஸ்துதிக்காக ஒரு பச்சை பொய்யைக் கொஞ்சம் தயக்கத்துடன் சொல்லிவிட்டு மேலே நடப்பார்.