பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

538

விந்தன் கதைகள்

அவன் என்ன செய்வான், பாவம்! எல்லாம் சகவாச தோஷம்; இல்லாவிட்டால் வீட்டுக்கு நாய் காவவென்றால் நாய்க்குக் காவலாக அவன் அங்கே இருந்து கொண்டிருப்பானா?

"நாளை, வந்து போயிற்று; நாலு நாட்'களும் வந்து போயின. வள்ளிநாயகம் வரவில்லை; வரவேயில்லை.

அந்தப் 'பட்டணத்துச் சாமி'யை எதிர் பார்த்தபடி, 'பட்டிக்காட்டுச்சாமி'கள் இரண்டும் எல்லோரா நகரைச்சுற்றிச்சுற்றி வந்தன; கண்ட இடத்தில் உண்டு, கண்ட இடத்தில் உறங்கின. கட்டுச் சோறு தீர்ந்தது. கையிலிருந்த காசும் கரைந்தது.

"இன்னும் எத்தனை நாட்கள் அப்பா, இப்படி நாம் இங்கே சுற்றிக் கொண்டிருக்க முடியும்?" என்றான் முருகையன்.

"அதற்காக வந்த காரியத்தை முடிக்காமலா போய்விடுவது? நீ பேசாமல் இரு, பட்டணம் நம்மைப் பட்டினி போட்டு விடாது!" என்றான் கண்ணாயிரம்.

இந்தச் சமயத்தில் யாரோ 'கலகல வென நகைக்கும் சத்தம் காதில் விழவே, இருவருமே திரும்பிப் பார்த்தனர். எதிர் வீட்டுத் தெருப்படிகளின் மேல் உட்கார்ந்திருந்த ஓர் ஏகாங்கி, "நகைத்தவன் நான்தான்; நாலு நாட்களாக நான் பட்டினி" என்றான் விரக்தியுடன்.

"உங்களை விட்டுவிட்டா இந்த வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுகிறார்கள்? அப்படிச் சாப்பிடுபவர்கள் திருடர்கள் என்று காந்தி ஐயா கூடச் சொல்லியிருக்காரே?" என்றான் கண்ணாயிரம் வியப்புடன்.

"இந்த வீட்டில் மட்டுமென்ன, எல்லா வீடுகளிலும் என்னை விட்டு விட்டுத்தான் சாப்பிடுகிறார்கள்!"

"எங்கள் கிராமத்தில் அப்படி யாரையும் விடுவதில்லையே?"

"அங்கே சிறிய சிறிய குடிசைகள்; அவற்றுக்குள் பெரிய பெரிய உள்ளங்கள். இங்கே பெரிய பெரிய மாளிகைகள் அவற்றுக்குள் சிறிய சிறிய உள்ளங்கள்!"

இதைச் சொல்லி அவன் வாய் மூடுவதற்குள் "ஏய் யார் அது?" என்று குரல் உள்ளேயிருந்து இடி முழக்கம் போல் ஒலித்தது.

"என்ன அது?" என்றான் கண்ணாயிரம், அந்த குரலொலியின் அதிர்ச்சியால் ஒரு குலுங்கி குலுங்கி நின்று.