பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவர்கள்

539

"ஒன்றுமில்லை; வீட்டுக்கு உரியவர்கள் என்னை உபசரிக்கிறார்கள்" என்றான் ஏகாங்கி.

அடுத்த கணம் அவன் தலையில் ஒரு செம்பு தண்ணீர் வந்து விழுந்து சிதறி வழிந்தது!

எதிர்பாராத இந்தத் தாக்குதலைக் கண்டதும் முருகையன் கொஞ்சம் பின்வாங்கி, "இதுவும் உபசாரத்தைச் சேர்ந்ததுதானா?" என்றான் கொஞ்சம் சந்தேகத்துடன்.

"ஆமாம்; பட்டிக்காட்டில் காலுக்குத் தண்ணீர் கொடுத்து உபசரித்தால், பட்டணத்தில் தலைக்குத் தண்ணீர் கொடுத்து உபசரிக்கிறார்கள்" என்றான் அவன், தலையில் விழுந்த தண்ணீரைத் தன் கையால் முடிந்தவரை தட்டிவிட்டுக் கொண்டே.

அவனிடம் தன் மேல் துண்டை எடுத்துக் கொடுத்து விட்டு "ஒன்றும் புரியவில்லை ; எனக்கு ஒன்றுமே புரியவில்லை!" என்றான் கண்ணாயிரம்.

"புரியும், இன்னும் இரண்டு நாட்கள் பட்டணத்தில் இருந்தால்!" என்று சொல்லிக் கொண்டே துடைத்த துண்டை அவனிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, "நன்றி நான் வருகிறேன்!" என்று நடையைக் கட்டிவிட்டான் ஏகாங்கி.

அன்றிரவு......

வண்டிமேடொன்றைத் தஞ்சமடைந்த தந்தையும் மகனும் வராத தூக்கத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருந்தனர். அப்போது "ஐயா, ஐயா!" என்று அவர்களை யாரோ தட்டி எழுப்புவது போலிருந்தது. 'இங்கேயும் யாராவது விரட்ட வந்துவிட்டார்களோ, என்னமோ?' என்ற பீதியுடன் இருவரும் எழுந்து உட்கார்ந்தனர். அவர்களுக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்திருந்த ஒரு கோவணாண்டி, "கோடை மாடு போல் கிடக்கிறீர்களே, ஏதாவது சாப்பிட்டீர்களா?" என்று அவர்களை விசாரித்தான்.

'இல்லை' என்பதற்கு அடையாளமாக இருவரும் தலையை ஆட்டினர்.

"நான் நினைத்தது சரிதான்; இந்தாருங்கள்; எழுந்து கையை அலம்பிக் கொண்டு வாருங்கள்!" என்று குடுவை தண்ணீரை எடுத்து அவர்களிடம் நீட்டினான் அவன்.

"பட்டணத்தில் இப்படியும் ஒரு பட்டிக்காடா?"

கண்ணாயிரத்துக்கு ஆச்சரியம் தாங்கவில்லை; சுற்றுமுற்றும் பார்த்தான். அவனுக்குச் சற்று தூரத்தில் வைக்கோல் வண்டியொன்று