படித்தவர்கள்
541
அடுத்த நாள்...
வழக்கம் போல் வள்ளி நாயகத்தின் வீட்டுக்கு வந்து வக்கீல் ஐயா வந்து விட்டாரா? என்று விசாரித்தான் கண்ணாயிரம்.
"வந்து விட்டார்! உட்காருங்கள்; இதோவந்துவிடுவார்!" என்று அவருடைய அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சைச் சுட்டிக்காட்டினான் வேலைக்காரன்.
கண்ணாயிரம் உட்காரவில்லை; நின்றது நின்றபடி நின்றான்.
உள்ளே யாரோ ஒரு கட்சிக்காரனுடன் வள்ளிநாயகம் பேசிக் கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது.
"இந்தக் குரல் எங்கேயோ கேட்ட குரலாயிருக்கிறதே?"
'ஆம் வள்ளிநாயகத்தின் குரல் மட்டும் அவனுக்குக் கேட்ட குரலாயில்லை; அவருடன் பேசிக் கொண்டிருந்த கட்சிக்காரனின் குரலும் அவனுக்குக் கேட்ட குரலாயிருந்தது.
சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகச் சற்றே உற்றுக் கேட்டான் அவன்.
"நீ வாங்கியது ரூபாய் ஆயிரந்தான்; இல்லையா?"
"வாங்கியது ரூபாய் ஆயிரந்தான்; எழுதிக் கொடுத்தது ரூபாய் இரண்டாயிரத்துக்கு!"
"அதை வைத்துக் கொண்டு தான் ரூபாய் இரண்டாயிரமும் அதற்குரிய வட்டியும் தனக்குச் சேர வேண்டுமென்று அவன் உன்மேல் வழக்குத் தொடர்ந்திருக்கிறான்; இதிலிருந்து நீ தப்ப வேண்டுமானால் இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது!"
"சொல்லுங்கள்!"
"அந்த ஆயிரம் ரூபாயைக் கூட அவனிடமிருந்து நான் வாங்கவில்லை என்று நீ சொல்லிவிட வேண்டும்!"
"ஐயையோ! அப்படிக்கூடப் பொய் சொல்லலாமா?"
"என்ன ஐயையோ! அவன் பொய் சொல்லும்போது நீ பொய் சொல்லக்கூடாதா?"
"அது எப்படிச் சொல்ல முடியும்? நான்தான் அவனுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேனே?"