பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

542

விந்தன் கதைகள்

"நீ எங்கே எழுதிக் கொடுத்தாய்? உனக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே?"

"எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் பேனாவைத் தொட்டுக் கொடுத்திருக்கிறேனே?"

"தொட்டுக் கொடுத்த கையைத்தான் எப்போதோ துடைத்துக் கொண்டிருப்பாயே! சும்மா சொல், வழக்கில் வெற்றியடைந்த பின் எனக்கு நீ ரூபாய் ஐந்நூறு கொடுத்தால் போதும்!"

"கேவலம், ரூபாய் ஐந்நூற்றுக்காக நான் பொய் சொல்வதோடு உங்களையும் பொய் வழக்காட வைக்க வேண்டுமா?"

"இந்த உலகத்தில் எது பொய் இல்லை?" எல்லாம் பொய் என்றுதான் நம்முடைய வேதம் கூடச் சொல்லுகிறது.

"வேதம் சொன்னால் சொல்லட்டும்; நான் சொல்ல மாட்டேன்!"

"சொல்லாவிட்டால் நீதான் கெட்டுப் போவாய்!"

"என்னைக் கெடுத்து விட்டு அவன் மட்டும் நன்றாயிருந்து விடுவானா? நன்றாயிருந்தால் இருக்கட்டும்; நான் வருகிறேன்"

இப்படிச் சொல்லிவிட்டு அந்தக் கட்சிக்காரன் வெளியே வந்ததும், "உங்களுடைய குரலிலிருந்தே உங்களை நான் தெரிந்து கொண்டு விட்டேன்!" என்றான் கண்ணாயிரம். கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகத்தையும் அவனைப் பார்த்த பின் தீர்த்துக் கொண்டு.

கோபண்ணா சிரித்தான். சிரித்து விட்டு "நீங்களும் இவரைப் பார்க்கத்தான் வந்தீர்களா?" என்றான் சுவரில் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த காந்தி மகானின் படத்தைப் பார்த்தபடி!

"ஆமாம்; இவரைப் பார்க்கத்தான் வந்தேன்; ஆனால் இனி பார்ப்பதாக இல்லை!" என்றான் கண்ணாயிரம், ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டவனைப் போல.

முருகையனுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன் அப்பா?" என்றான் இடையே குறுக்கிட்டு.

"படித்தது போதும் வா, இவருடைய வண்டியிலேயே நாமும் ஊருக்குப் போய் விடுவோம்" என்றான் அவன், படியை விட்டுக் கீழே இறங்கிக் கொண்டே.

அதற்குமேல் முருகையன் அவனை ஒன்றும் கேட்கவில்லை, கேட்பதற்கு என்ன இருக்கிறது, 'படித்தவர்களின் லட்சண'த்தை அவனும் பார்த்த பிறகு?