பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதினோராம் அவதாரம்


காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா 'ஊம்.. ஊம்... ஊம்" என்று ஈச்சம் பாயில் படுத்தபடி 'ஊம்' கொட்டிக் கொண்டிருந்தான்.

அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து அப்பொழுதுதான் வாங்கி வந்த அரைப்படி நெல்லை உரலில் போட்டு 'உக்கும்...உக்கும்...உக்கும்' என்று குத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி மாரியாயி.

முத்தையாவின் முணுமுணுப்பு வரவர அதிகமாகிக் கொண்டு வரவே, அவள் உரலிலேயே உலக்கையை நாட்டி விட்டு உள்ளே ஒடினாள்.

அப்படியும் இப்படியுமாக அவன் புரண்டு புரண்டு படித்தான். பாயின் மேல் விரிக்கப்பட்டிருந்த பழைய புடவைத்துண்டு - அதாவது பஞ்சைமகள் படுக்கும் பஞ்சு மெத்தை - நழுவித் தரையில் விழுந்து கிடந்தது. கடந்த கால வாழ்க்கையைப் பற்றி மனத்தில் எழுந்த கடைசி எண்ணங்களின் பயனாக, அவன் கடைக்கண்களில் நீர்த் துளிகள் அரும்பியிருந்தன.

"என்ன குத்துதா?”

"ஆமாம், நெஞ்சை எண்ணம் குத்துது; உடம்பைப் பாய் குத்துது: வயிற்றைப் பசி குத்துது!”

"இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ, கஞ்சி காய்ச்சி எடுத்துக்கிட்டு வந்துட்றேன்!” என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் நடைக்கு வந்தாள் மாரியாயி.

"என்னமோ, அதுவரை என் உயிரும் பொறுத்துகிட்டு இருந்தால் சரி!" என்று குப்புறப் படுத்தான் முத்தையா.

"சிறது நேரத்திற்கெல்லாம் முத்தையனுக்கு எதிரே கஞ்சிக் கலயம் காட்சியளித்தது. அதைக் கண்டதும் முகத்திலே கோடி சூரியப் பிரகாசத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார முயன்றான் முத்தையா. ஆனால் அவனது உடல் நலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

கலயத்தைக் கீழே வைத்துவிட்டு அவனைத் தூக்கி உட்கார வைத்தாள் மாரியாயி. 'முருகா! முருகா' என்று முனகிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் முத்தையா.