பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதினோராம் அவதாரம்

551


"அடே! அவனுங்கக் கிட்ட யாருடா போவான்? அவனுங்களுக்கு இருக்கிற கோவத்திலே நம்மையும் ஒரு போடு போட்டு வச்சா என்ன பண்றது?" என்றான் 202.

"அதாஅண்ணே, நானும் பார்க்கிறேன்! அவனுங்கக்கிட்ட உதை பட்டா நம்ம உடம்பு தானே நோவப் போவுது? இன்ச்சிபெட்டரு ஐயாவுடைய உடம்பா நோவப் போவுது?"

"இங்கே நம்ம நிக்கிறதுகூடத் தப்பு எவனாச்சும் ஒரு பித்துக்குளிப் பய வந்து, போலீஸ் போலீஸ் என்று கத்துவான். அப்படிக் கத்தர வரைக்கும் நாம ஏன் இங்கே நின்னுக்கிட்டு இருக்கணும்? நீ வந்தாவா, வராவிட்டாப் போ! நான் போரேப்பா!" என்று சொல்லிக் கொண்டே 202 அந்த இடத்தை விட்டு நழுவி விட்டான்.

101 எதற்கும் துணியாமல், சிறிது நேரம் அங்கேயே நின்று தவித்துக் கொண்டிருந்தான். அதற்குள் அந்தக் குடியர்களில் ஒருவன் கைச் சண்டையை விட்டுக் கத்தியை எடுத்துக் கொண்டான். அவ்வளவுதான்; கல்லைக் கண்ட நாயைப் போல் 101 இருந்த இடம் தெரியவில்லை!

அடுத்த நிமிஷம் அவன் அந்தத் தெருக்கோடியில் திரும்பிக் கொண்டிருந்தான்.

மாரியாயி அந்த சூரப்புலியின் கண்ணில்பட்டாள்!

"ஏய்":என்று அவளை அதிகாரத்துடன் அதட்டி அழைத்தான் 101.

"நேரமாச்சுங்கோ, சும்மா பேரம் பண்ணி பொழுதை ஒட்டாதீங்கோ ஒரே விலை ஒரு ரூபாய் தானுங்க!" என்றாள் அப்பாவி மாரியாயி.

101 'இடி இடி' என்று சிரித்தான்.

"ஏம்மா, என்னைக் கட்டை வாங்க வந்தவன்னா நினைச்சுக்கிட்டே?... ஹஹ்ஹிஹ்ஹி... " என்று தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டே அவன் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.

மாரியாயிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் தன்முகத்தில் அசடு வழிய, 'நீங்க கட்டை வாங்க வரலையா? அப்படின்னா நான் போய்விட்டு வரேனுங்க!" என்று சொல்லி விட்டுத் திரும்பினாள்.