பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



556

விந்தன் கதைகள்

வெற்றிலைத் தோட்டமும் அந்த மாந்தோப்பும் சேர்ந்ததுதானா உலகம்?' என்று கேலியாகக் கேட்டுவிட்டுச் சிரித்தது.

"ஏன், வேறு எங்கே போகவேண்டுமென்கிறாய்? உண்பது இங்கே, உறங்குவது அங்கே! - இவை போதாதா நமக்கு?" என்றேன்.

"ஏது, வரவர நீயும் மனிதர்களைப் போலாகி விட்டாயே!”

"உனக்கு என்ன தெரியும்? அவர்களில் எத்தனையோ பேருக்கு உண்பதற்கு உணவில்லை; உறங்குவதற்கு இடமில்லை, அப்படிப்பட்டவர்களை வேறு என்ன செய்யவேண்டுமென்று சொல்கிறாய்?"

"சரிசரி, அதெல்லாம் நாகரிக உலகத்துச் சமாசாரம் - நமக்கு வேண்டாம், நீ வா இப்படி எங்கேயாவது போய்ச் சுற்றிவிட்டு வரலாம்" என்று சொல்லிச் சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு ரங்கா தன் குஷியை வெளியிட்டது.

அதன் குஷியைப் பார்த்ததும் எனக்கும் என்னையறியாமல் குஷி பிறந்து விட்டது. அவ்வளவுதான்; இருவரும் ஸ்டேஷனுக்குச் செல்லவில்லை; 'க்யூ'வில் நிற்கவில்லை; டிக்கெட் வாங்கவில்லை; ரயிலிலோ விமானத்திலோ சவாரி செய்யவில்லை; சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு வான வீதியை நோக்கி 'ஜம்'மென்று கிளம்பினோம். பறந்தோம், பறந்தோம், பறந்தோம், அப்படிப் பறந்தோம், போனோம், போனோம், போனோம், அப்படிப் போனோம் - நாட்டையும் நகரத்தையும் கடந்து, காட்டையும் கடலையும் கடந்து, மலையையும் மடுவையும் கடந்து, நதியையும் புனலையும் கடந்து போய்க்கொண்டே இருந்தோம் ஆமாம், நிற்கவே யில்லை!

கடைசியில் எங்கோ எங்களுக்கு அலுத்துப் போயிற்றோ? அங்கே உட்கார்ந்தோம். எங்களைத் தொடர்ந்து வர முடியாமல் சூரியன் வெட்கிப் போய் மலைத் தொடரில் ஒளிந்து கொள்ள ஓட்டமாய் ஓடினான். அவனைப் பார்த்துச்சிரித்து வாய் மூடவில்லை; ஆனானப்பட்ட சூரியனையே வெற்றி கொண்ட எங்களை மிரட்டுவதற்காகப் பேதை இருள் கவ்வி வந்தது. அதன் மூஞ்சையும் முகரக் கட்டையையும் பார்த்துக் கொண்டிருக்க இங்கே யாருக்குப் பிடிக்கிறது? - "என்ன வீட்டுக்குத் திரும்பி விடுவோமா?" என்றேன், ரங்காவை நோக்கி.

"இனிமேல் எப்படித் திரும்புவது?" - என்று கேட்டது ரங்கா,

"திரும்பாமல் என்ன செய்வதாம்?"