பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சண்டையும் சமாதானமும்

559


"வந்தனம்" என்று சொல்லிவிட்டு, அந்தப் பொந்துக்குள் நுழைந்தேன். பிறகு உள்ளே யிருந்தபடி நனைந்த சிறகுகளையெல்லாம் அலகால் கோதிவிட ஆரம்பித்தேன்.

இந்தச் 'சகிக்க முடியாத காட்சி'யைக் கண்ட ரங்கா, ஆத்திரத்துடன் ஓடோடியும் வந்து என்னையும் ஒரு கைபார்த்துவிட்டுச் சென்றது. "எங்கே சென்றதோ?" என்று எட்டிப் பார்த்தேன். சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது!

சிறிது நேரத்துக்கெல்லாம் மழை நின்றது; ஆனால் சண்டை நிற்கவில்லை!

பொழுது விடிந்ததும் இரவு தங்குவதற்கு இடம் கொடுத்த கிளியிடம் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு வெளியே வந்தேன்.

என்ன விந்தை இது! - அப்போதும் சண்டை ஓயவில்லை.

"விட்டேனா, பார்!" "விட்டேனா, பார்!" என்று இரண்டும் விடாமல் ஒன்றையொன்று கொத்திக் கொண்டிருந்தன.

"ரங்கா போதும், சண்டையை நிறுத்து! பகையைப் பகையால் வெல்வது முடியாத காரியம்; அப்படியே வென்றாலும் அந்த வெற்றி நீடித்திருக்காது. இந்த வீணான முயற்சியில் ஏன் உன்னுடைய அருமையான காலத்தைக் கழிக்கிறாய்?" வீட்டுக்குப் போவோம், வா!" என்றேன்.

"போடா, உன்னைப்போல் என்னையும் கோழை என்று நினைத்துக் கொண்டாயா?" என்று ரங்கா சீறி விழுந்தது.

"சரி, நீ வீரனாகவே இரு, அப்பா!" என்று சொல்லிவிட்டு நான் வீட்டை நோக்கிக் கிளம்பினேன்.

அந்த 'முடிவில்லாத சண்டை' தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது.

ஆனால் அந்த 'வீர'னின் வாழ்க்கையிலோ இன்று வரை அமைதி நிலவவில்லை; 'கோழை'யின் வாழ்க்கையிலோ பரிபூரண அமைதி நிலவியது.