பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பும் அதிகாரமும்

561

தன் உள்ளத்தில் பொங்கி வந்த உணர்ச்சிகளை யெல்லாம் ஒருவாறு அடக்கிக் கொண்டு, "ஷாஹுன்ஷா!" என்றுதன் ஆசனத்தை விட்டு எழுந்து வந்து சம்பிரதாயப்படி அரசனின் முன்னால் நின்றான் கவி.

"உன்னுடைய மானிடம்..." என்றான் பாதுஷா. தான் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கு முன்னரே, “என்னுடைய மான் இல்லை, மகராஜ்! அல்லாவினுடையது!" என்று அடித்துச் சொன்னான் கவி.

"தெரியும்; ஜிஜியா அந்த மானிடம் தன் மனதைப் பறிகொடுத்து விட்டாள்..."

"இருக்கலாம்; ஆனால் அந்த மானும் தன் மனதை ராணியிடம் பறி கொடுக்க வேண்டுமே!" என்றான் கவி.

பாதுஷாவின் கண்கள் 'ஜிவ்' வென்று சிவந்தன. அவன் கலகலவென்று பயங்கரமாகச் சிரித்தான். ராஜசபையில் பிரச்சன்னமாயிருந்தவர்களின் விழிகளெல்லாம் மிரண்டு விழித்தன.

"என்ன சொல்கிறாய்? ஜிஜியா அந்த மானை அடையவேண்டுமென்றால் அவளிடம் அது தன் மனதைப் பறி கொடுக்க வேண்டுமோ? - பேஷ், நன்றாயிருக்கிறது! - கழுத்தில் விலங்கைப் போட்டால் தானே மனதைப் பறி கொடுத்து விட்டுப் போகிறது!”

அவ்வளவுதான்; அரசனின் முன்னால் கவி தன் இரு கரங்களையும் அலட்சியமாக நீட்டி "இந்த கைகளில் விலங்கிடுவதற்கு முன்னால் அந்தமானின் கழுத்தில் விலங்கிடுவது யாராலும் முடியாத காரியம் பாதுஷா!" என்றான்.

வில்லாவின் கண்களில் தீப்பொறி பறந்தது. "என்ன என்னால் கூடவாமுடியாது!":என்றான்ஆச்சரியத்துடனும் அவமானத்துடனும்.

"என்னைப் பொறுத்தவரையில் எல்லோரையும் சமமாகத் தான் பாவிக்கிறேன், பாதுஷா!" என்றான் இஸா.

"கடைசி தடவையாகக் கேட்கிறேன்; என்னுடைய கோபத்துக்கு ஆளாக வேண்டாம்..."

"அல்லாவின் கோபத்தைத் தவிர வேறு யாருடைய கோபத்துக்கும் நான் அஞ்சுவதில்லை!"

வி.க. -36