பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்தாண்டுத் திட்டம்

573

என்று போகிற போக்கில் அதை எச்சரித்துக் கொண்டே போயிற்று லாரி நம்பர் முப்பத்தாறு முப்பத்தாறு.

அன்று மாலை...

இரண்டாவது முறையாக எழும்பூர் மேம்பாலத்தின் மேல் ஏற முடியாமல் ஏறிக் கொண்டிருந்த கைவண்டியை நோக்கி, "ஏறு, முன்னேறு!" என்று கத்திக் கொண்டே சென்ற கார் நம்பர் 4545, திரும்பி வரும் போது அப்படியே திகைத்து நின்றுவிட்டது. காரணம், பாலத்தின் இறக்கத்தில் தன்னை மீறி உருண்டு சென்ற வண்டியைத் தடுத்து நிறுத்த முடியாமல் அதன் முதலாளி கீழே விழுந்து, அவர்மேல் வண்டியில் ஏற்றப் பட்டிருந்த சரக்குகளெல்லாம் சரிந்து, அவர் உருத்தெரியாமல் நசுங்கிப் போயிருந்தது தான்.

மேற்படி காட்சியைப் 'பெரிய மனிதர்கள் தோரணையில் அருவருப்புடன் பார்த்துக் கொண்டே நின்ற கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்தை நோக்கி "என்ன பார்க்கிறீர்? என் எஜமான் சட்டத்துக்கு விரோதமாக சாகவில்லை ஐயா, சட்டத்துக்கு விரோதமாகச் சாகவில்லை!" என்றது கைவண்டி, விரக்தியுடன் சிரித்துக் கொண்டே.

அதைக் கேட்டுக் கொண்டே அந்த வழியாக வந்த லாரி நம்பர் 3636 "சட்டத்துக்கு விரோதமாக மட்டுமல்ல; இலக்கியத்துக்கும் விரோதமாகச் சாகவில்லை!" என்றது, அழுத்தந்திருத்தமாக.

"உண்மை; முற்றிலும் உண்மை. ஏனெனில், சாகும் போதுகூட அவர் நம்பிக்கையுடன் தான் செத்திருக்கிறார்" என்றது கைவண்டி.

"அவசரப்பட்டு விட்டார்; மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் முடிவதற்குள் அவசரப்பட்டு விட்டார்" என்று முணுமுணுத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றது கார் நம்பர் 4545.