பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

578

விந்தன் கதைகள்

"ஆமாம், அதோ பாருங்கள்!" என்றாள் அவள், அலமாரியைச் சுட்டிக் காட்டி.

"அட, பாவிகளா! தீபாவளிப் பரிசுக்குப் புதுசா ஏதாவது 'ஐடியா' சொல்லுங்கள் என்றால், இதைச் சொல்லி என்னிடம் ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு போய்விட்டார்களே!" என்று அலறினார் அவர்.

"இந்த 'ஐடியா'வைக்கூடக் காசு கொடுத்துத்தான் வாங்கினீர்களா?" என்றாள் தீபா.

"ஆமாம், தீபா ஆமாம்; அதற்காகவாவது நாளைக்கு நீ இந்தக் கிண்ணத்திலிருக்கும் எண்ணெயைத் தலையில் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்தால் எனக்கு எவ்வளவோ திருப்தியாயிருக்கும்!" என்றார் வானா மூனா, பரிதாபமாக.

"பொழுது விடியட்டும்; பார்க்கலாம்!" என்றாள் அவள், அந்தச் சமயம் அவரிடமிருந்து தப்புவதற்காக.

"பார்க்கலாம் என்று சொன்னாயே, அதுவே போதும்; பரம திருப்தி!" என்று அவளைப் பிரிய மனமில்லாமல் பிரிந்தார் அவர்.

மறுநாள் காலை 'அடியார்களின்' வேண்டுகோளுக்கு இணங்கி, அத்தனை கிண்ணங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எண்ணெயைத் தொட்டுத் தலையில் வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்துவிட்டு மாடிக்கு வந்தாள் தீபா. அவள் வீட்டுக்கு எதிர்த்தாற் போலிருந்த பூந்தோட்டத்தில் வழக்கம் போல் வந்து பூப்பறித்துக் கொண்டிருந்தாள் பொன்னாயி. அவளைக் கண்டதும் 'இன்றுகூட இவள் வேலைக்கு வந்திருக்கிறாளே! இவளுக்குத் தீபாவளி இல்லையா, என்ன?' என்று தோன்றிற்று அவளுக்கு.

இந்தச் சமயத்தில் தோளில் பூக்குடலையுடனும் கையில் புதுப் புடவையுடனும் யாரோ ஒருவன் அங்கு வந்து, "இந்தாம்மா, ஐயா கொடுக்கச் சொன்னாரு!" என்று சொல்லிக் கொண்டே புடவையை அவளிடம் நீட்டினான்.

"புடவை இருக்கட்டும்; முதலில் நீ பூக்குடலையைப் பிடி" என்றாள் பொன்னாயி.

அவன் பிடித்தான்; பறித்த பூக்களை அதில் கொட்டி விட்டு, "நேற்றையக் கூலி எங்கே?" என்றாள் அவள் கம்பீரத்துடன்.

"அதையும் கொடுத்திருக்கிறார்!" என்று நாலணாவை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு "புடவை?" என்றான் அவன்.