பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குப்பையிலே குருக்கத்தி

579


"அவளுக்கென்று ஒருவன் வரும்போது அவன் அவளுக்குப் புடவை எடுத்துக் கொடுப்பானாம்; அதுவரை நீங்கள் அவளுக்கு வேலை மட்டும் கொடுத்தால் போதுமாம்; புடவை எடுத்துக் கொடுக்க வேண்டாமாம் என்று நான் சொன்னதாகப் போய்ச் சொல்!" என்றாள் அவள்.

"உன் இஷ்டம்!" என்று சொல்லிவிட்டு அவன் சென்றதும், "இஷ்டத்தில் தானே இருக்கிறது கஷ்டம்!" என்று சொல்லிக் கொண்டே, அடுத்தாற் போலிருந்த பலசரக்குக் கடைக்குச் சென்ற பொன்னாயி, உள்ளங் கையிலே ஓரணாவுக்கு எண்ணெய் வாங்கித் தலையில் வைத்துக் கொண்டாள். அரையணாவுக்குச் சிகைக்காய்ப் பொடியும் அரையணாவுக்கு வெற்றிலைப்பாக்கும் வாங்கிக்கொண்டு கிணற்றடிக்கு வந்தாள். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே 'தீபாவளி ஸ்தான'த்தை முடித்துவிட்டுத் தோய்ந்த புடவையில் பாதியைத் தோட்டத்து வேலியின்மேல் காயப் போட்டு விட்டுப் பாதியை இடுப்பிலே சுற்றிக்கொண்டு நின்றாள். 'பாவம், அவளிடம் இருப்பதே ஒரே ஒரு புடவைதான் போலிருக்கிறது!' என்று நினைத்த தீபாவுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, கூர்க்காவை விட்டு அவளைக் கூப்பிடச் சொன்னாள்.

அவன் வந்து "அம்மா உன்னைக் கூப்பிடறாங்க!" என்றதும், "பறித்த பூக்களைத்தான் கடைக்குக் கொடுத்தனுப்பி விட்டேனே, என்னிடம் பூ ஏது?" என்றாள் அவள்.

"இல்லேன்னா வந்து சொல்லேன்!" என்றான் அவன்.

"அதை நீயே சொல்லக் கூடாதா?" என்று அலுத்துக் கொண்டே வேலியின் மேல் போட்டிருந்த புடவையை எடுத்துத் தோளின் மேல் போட்டுக் கொண்டு அவள் அவனைத் தொடர்ந்தாள்.

அதற்குள் பட்டுப் புடவையும் கையுமாக வந்து வாசலில் நின்று கொண்டிருந்த தீபா "தீபாவளியும் அதுவுமாகப் புதுப்புடவை கட்டாமல் இருக்கலாமா? இந்தா, இதைக் கட்டிக்கொள்!" என்றாள்.

"என்னை மன்னியுங்கள், அம்மா! எந்த வேலையும் செய்யாமல் நான் யாரிடமும் எதையும் வாங்கிக் கொள்வதில்லை" என்றாள் பொன்னாயி.