பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

582

விந்தன் கதைகள்

"என்னமோண்ணே, என் பொழைப்பிலே மண்ணைப் போட்டுடாதீங்க! உஷாராப் பார்த்துக்குங்க, பொறாவைத் தேடிப் பருந்து கத்தறாப்போல அந்தப் பசங்க சும்மா சுத்து, சுத்து'ன்னு சுத்திக்கிட்டே இருக்கானுங்க!"

"அதெல்லாம் எனக்குத் தெரியும், நீ போடா!" என்று பெரியசாமி, சும்மா’ அவனை ஒரு தள்ளுத் தள்ளி விட, அப்போதும் சின்னசாமி அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே தயக்கத்துடன் நடக்க, அவனுக்குப் பின்னால் நின்று அவன் கால்கள் பின்னுவதைக் கண்ட பெரியசாமி கலகலவென்று நகைக்க, "என்ன அண்ணே, சிரிக்கிறீங்க?" என்றான் அவன், மேலும் தயக்கத்துடன் நின்று.

"ஒண்ணும் இல்லேடா என்னதான் புதுசா இருந்தாலும் இப்படியா? நீ கொஞ்சம் மிடுக்கா போ, அப்போத் தான் காரியம் நடக்கும்!" என்றான் பெரியசாமி. அவனுக்குத் தெரியாமல் தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டே.

அதைக் கவனிக்காத சின்னசாமி, "சரி!" என்று மூக்கால் அழுது கொண்டே அவளை நெருங்க, "எல்லாம் நான் கேட்டுக்கிட்டுத் தான் இருந்தேன்! அதுக்காக நீங்க ஒண்ணும் இங்கே மணிக்கணக்கா நின்று, எங்கிட்டே கொசிறிகிட்டு இருக்கவேணாம்; இந்தாங்க, ஒரேயடியா ரெண்டு ரூவாயாவே கொடுத்துடறேன், எடுத்துக்கிட்டுப் போங்க! அந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிங்க வந்ததும், நானே உங்களைப் பிடிச்சு அவங்ககிட்டே கொடுக்கலேன்னா, என் பேரு எச்சிமியில்லே!' என்று இவன் அவளை மிரட்டுவதற்குப்பதிலாக அவளே இவனை மிரட்ட, இவன் விழிக்க, நிலைமை மோசமாவதற்கு முன்னால் பெரியசாமி விரைந்து வந்து அந்த ரூபாய் இரண்டையும் வாங்கிக்கொண்டு 'லஞ்சம் வாங்கறது மட்டும் தப்பு இல்லே எச்சிமி, கொடுக்கறதும் தப்புன்னு தெரியுமா உனக்கு?" என்றான் அவள் விட்ட சவாலுக்கு எதிர்ச்சவாலாக.

"எல்லாம் தெரியும், போய்யா!" என்றாள் அவள், அப்போதும் அலட்சியமாக.

அதற்குமேல் அவளை மிரட்டுவது தனக்கே ஆபத்து என்பதை உணர்ந்த பெரியசாமி மேலே நடக்க, அவனைத் தொடர்ந்து நடந்தான் சின்னசாமி.