பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்டெடுத்த நாட்குறிப்பிலிருந்து....

589

சர்வ வல்லமையுள்ள சாட்சாத் கணவனாயிற்றே நான்! எனக்குத் தெரியாமல் அவள் எதையாவது மறைத்தால் அதை நான் பொருட்படுத்தாமல் இருப்பேனா? அப்படியிருந்தால் அவளைப் பொறுத்தவரை எனக்குள்ள ‘அதிகாரம்' என்ன ஆவது? ஆகவே நான் ஆத்திரத்துடன், '"அது எனக்குத் தெரியும்; என்ன அது? அதைச் சொல், முதலில்!" என்றேன் விறைப்புடன்.

"சரியாய்ப் போச்சு போங்கள்! தூக்கம் கெட்டுப் போகுமே என்று பார்த்தால் அதற்குள் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டதா உங்களுக்கு? எனக்கென்ன வந்தது, எப்படியாவது போங்களேன்?" என்று சொல்லிக் கொண்டே அவள் எனக்கு முன்னால் ஒரு கடிதத்தை எடுத்து விட்டெறிந்துவிட்டு, "யாரோ தமிழ்மாறனாம்; அவர் உங்களிடம் இந்தக் கடிதத்தைக் கொடுக்கச் சொன்னாராம்; இது தான் விஷயம்; இதை நீங்கள் பொழுது விடிந்து பார்த்தால் என்னவாம்?" என்றாள், அதற்குள் எழுந்து அழ ஆரம்பித்துவிட்ட குழந்தையைத் தூக்கிச் சமாதானம் செய்து கொண்டே.

அவள் சொன்னபடி, அதைப் பார்க்கப் பொழுது விடியும் வரை காத்திருக்கவில்லை நான்; அப்போதே பிரித்துப் பார்த்தேன்:

நண்பர்க்கு,

இன்று காலை உங்களிடம் பேசிவிட்டு வந்ததிலிருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. நீங்கள் என்னதான் சொன்னாலும் தமிழுக்காக ஒரு சில தமிழராவது தங்களைத் தியாகம் செய்யாதவரை, இந்தி ஏகாதிபத்தியவாதிகள் இறங்கி வரமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். அந்த நினைப்பைச் செயலாக்க என்னையே 'முதல் பலி'யாக அவர்களுக்குக் கொடுத்து விடுவதென்றும் நான் தீர்மானித்து விட்டேன். இனி யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் பொழுது விடிவதற்கு முன்னால் அது எப்படியும் நடந்துவிட்டிருக்கும்...

வருந்தற்க; எனக்குப் பின்னால் தமிழ் வாழ்வது போலவே என் தாயாரும் வாழவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த விருப்பத்தை நம் 'பாக்டரியிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டியிருக்கும். ‘கிராஜுடி, பிராவிடெண்ட் பண்ட்' ஆகியவற்றின் தொகையைக் கொண்டு நீங்கள் தான் நிறைவேற்றி வைக்க வேண்டும். அதற்காகவே இந்தக் கடிதம்....

கடைசி வணக்கத்துடன்
தமிழ் மாறன்.