பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வணக்கத்துக்குரியவள்


சொல்வதற்கு மட்டுமல்ல; நினைப்பதற்கே நெஞ்சம் ‘ரஸக் குறை'வாக இருந்தாலும், அந்தக் கடிதம் அவளை அன்று அப்படித்தான் நினைக்க வைத்தது.

'வாழ்க்கை, வாழ்க்கை' என்கிறார்களே, அந்த வாழ்க்கை என்பது தான் என்ன? அதில் உடலுறவைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாதா? அந்த உறவு இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துவிடுமா? - வெட்கக் கேடு!

என்னதான் முற்போக்கு வாதியாக இருந்தாலும் அவர் இப்படியா எழுதுவார், தம் மனைவிக்கு?

மனைவிக்குத்தான் இப்படி எழுதினாரென்றால், மாற்றானுக்குமா அப்படி எழுத வேண்டும்? அவர் படித்த சில நாவல்கள், அவர் பார்த்த சில நாடகங்கள், சினிமாக்கள், அவர் கேட்ட சில பேச்சுக்கள் அவரை இவ்வாறு எழுதத் தூண்டியிருக்குமோ?

கடவுளே, அந்த அழகான கடிதத்தை எடுத்துக் கொண்டு அவன் இங்கே வந்து நின்றால், அவனுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

அவருக்கு அவன் எப்படியோ, என்னைப் பொறுத்தவரை அவன் ஏற்கனவே ஒருமாதிரி....

ஒருமுறை அவனை நான், "அண்ணா!" என்று அழைத்ததையே அவன் விரும்பவில்லை. "உன் கணவன் என் மனைவியை அண்ணி' என்று அழைக்கும்போது உனக்கு நான் எப்படி அண்ணாவாவேன்?" என்று கேட்டு 'இளி, இளி' என்று இளித்தான். அதற்கேற்றாற்போல் அவரும், "ஆமாம் அமுதா! அவர் எனக்கு அண்ணாவாயிருக்கும் போது உனக்கும் எப்படி அண்ணாவாக இருக்க முடியும்?" என்று அவனுக்கு எதிர்த்தாற் போலவே என்னைக் கேட்டு வைத்தார். அன்றிலிருந்து அவன் என்னிடம் 'மைத்துனி முறை' கொண்டாடுவது போதாதென்று, இவர் தாம் போகும்போது அவனையே எனக்குத் துணையாக வேறு வைத்துவிட்டுப் போய்விட்டார்! அவருடைய நம்பிக்கையைக் குலைக்கும் அளவுக்கு இன்றுவரை அவன் என்னிடம் அப்படியொன்றும் தவறாக நடந்துகொள்ளவில்லை யென்றாலும், அவனுடைய பார்வை - அவ்வளவு கூராகவா இருக்கும், அது?

அதைப்பற்றியும்தான் ஒரு நாள் அவரைக் கேட்டு வைத்தேன்! - அதற்கு அவர் "உனக்குத் தெரியாது அமுதா! அவர் ஒரு கவிஞர்; கவிஞர்கள் எதையும் எப்போதுமே அப்படித்தான் ஊருடுவிப் பார்ப்பார்கள்!" என்று சொல்லிவிடவில்லையா?