பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வணக்கத்துக்குரியவள்

597


அது எப்படியாவது போகட்டும்; அவர் என்னை விட்டுப் பிரிந்த ஒரு வாரத்துக்கெல்லாம் அவன் ஒரு நாள் எனக்குப் பின்னால் வந்து என் தலையிலிருந்த ஒரு ஒற்றை ரோஜாவை எடுத்து முகர்ந்து பார்த்தானே, அதுவும் கவிஞர்களின் கைவரிசைகளில் ஒன்றாகத்தான் இருக்குமோ? - என்ன இழவோ, எனக்கு அப்படித் தோன்றவில்லை. வந்தது வரட்டுமென்று "என்ன இது?" என்று ஒரு சீறினேன்.

"ஒன்றுமில்லை; மலரைத்தான் தீண்டினேன்; உன்னைத் தீண்டவில்லையே!" என்றான் அவன் ஒரு விஷமச் சிரிப்புடன்.

"அதைச் செடியில் இருக்கும்போது தீண்டுங்கள்; என் தலையில் இருக்கும் போது தீண்ட வேண்டாம்" என்று நான் 'வெடுக்'கென்று சொன்னேனோ இல்லையோ, அன்றிலிருந்து அவன் இங்கே வருவதைக்கூட ஓரளவு குறைத்துக் கொண்டு விட்டான். அதற்கு முன்னால் “திறந்த வீட்டில் நாய் நுழைவது போல்' என்பார்களே, அந்த மாதிரியல்லவா அவன் இந்த வீட்டுக்குள் அடிக்கொருதரம் நுழைந்து கொண்டிருந்தான்!

என்னைக் கேட்டால் அவன் இங்கே வராமலேகூட இருந்து விடலாம் என்பேன்; அவருடைய அம்மா எனக்கு இங்கே துணையாயிருக்கும்போது அவன் வேறு எதற்காம்?

ஆனாலும் அந்த ‘மலர் பறி படல'த்தைப் பற்றி அவருக்கு நான் அப்போதே எழுதாமற் போய்விட்டது எவ்வளவு பெரிய தவறாகப் போய்விட்டது!

இப்போது அப்படியே நான் அந்த நிகழ்ச்சி பற்றி எழுதினால் என்ன? அதற்கும் அவர் 'உனக்குத் தெரியாது, அமுதா! அவர் ஒரு கவிஞர்; அப்படித்தான் செய்வார்!' என்று எழுதியிருந்தாலும் எழுதியிருப்பார்!

அது கிடக்கட்டும்; இன்று அவன் 'பழம் நழுவிப் பாலில் விழுந்தது' என்று நினைத்து, அந்தக் கடிதத்துடன் வந்து நின்றால், என்ன சொல்லி அவனை நான் இங்கிருந்து அனுப்பி வைப்பது?

சீசீ, மரணத்தறுவாயில் சிலர் வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவார்கள் என்கிறார்களே, அந்த உளறலில் ஒரு பகுதியாக இருக்குமோ , இது?....

இப்படி நினைத்ததும் அந்தக் கடிதத்தை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்தாள் இவள்.

தமக்குப் பிறகு தம்முடைய வீட்டையும் அந்த வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருக்கும் வகையில் மாதந்தோறும் கிடைக்கும் ரூபாய் நூறையும் தம் மனைவி அனுபவிக்க வேண்டும்