பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காந்தியவாதி

"நாளைக்குத் தீபாவளி என்று தலையைச் சொரிந்தான் குப்புலிங்கம்.

"ஆமாம், அதற்கென்ன இப்போது?"என்று அன்பையும் அஹிம்ஸையையும் சற்றே மறந்து கேட்டார், காந்திஜியின் படத்திற்கு அருகே விளக்கேற்றி வைத்து விட்டுப் பண்பே உருவாய் நின்றுகொண்டிருந்த தோல் மண்டிதுளசிங்கராயர்.

"ஒன்றுமில்லை....."

“என்ன ஒன்றுமில்லை? இதோ பாரும் போதுமென்ற மனந்தான் பொன் செய்யும் மருந்து!"

"உண்மைதான்; ஆனால் ஒன்று....."

“என்ன ஆனால் ஒன்று?"

"வயிறு போதுமென்று சொல்லாதவரை மனம் போதுமென்று சொல்லாது போலிருக்கிறதே!"

"அதற்காகக் கடன்வாங்கித் தீபாவளி கொண்டாட வேண்டுமா, என்ன?”

"இல்லை......"

"இல்லையாவது, கில்லையாவது! வாழ்க்கையில் எளிமை வேண்டும் ஐயா, எளிமை வேண்டும். அதுமட்டும் போதாது மனிதனுக்கு; சொல்லில் சத்தியம் வேண்டும்; செய்கையில் தூய்மை வேண்டும்; நடத்தையில் ஒழுக்கம் வேண்டும்-எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி வேண்டும். இதைத்தான்காந்தி மகாத்மா அன்று சொன்னார்; இன்று நான் சொல்கிறேன் - உதாரணத்துக்கு வேண்டுமானால் என்னைப் பாரும்; மேலே ஒரு துண்டு, கீழே ஒரு துண்டு - இவற்றைத் தவிர வேறு ஏதாவது நான் அணிந்திருக்கிறேனா?"

"இல்லை......"

"ஒரே ஒரு கெடில்லாக் காரைத் தவிர வேறு கார் ஏதாவது வைத்துக் கொண்டிருக்கிறேனா?"