பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

606

விந்தன் கதைகள்

கேட்பதற்கு பதில் சொல், முதல் பொம்மை என்ன சொல்கிறது?" என்று கேட்டார் அவர்.

"கண்ணைப் பொத்திக்கொள்ளச் சொல்கிறது!" என்றான் அவன்.

"நாசமாய்ப் போச்சு! இப்போது நீ படித்தாயே, 'தீயாரைக் காண்பதும் தீதே!' என்று - அதைச் சொல்லாமல் சொல்லவில்லையா, அந்த பொம்மை?"

"ஆமாம்ப்பா, அதைத்தான் சொல்கிறது போலிருக்கிறது!"

"சரி, இரண்டாவது பொம்மை என்ன சொல்கிறது?"

"காதைப் பொத்திக் கொண்டு இருக்கிறதே, அந்தப் பொம்மைதானே? 'தீயார் சொல் கேட்பதும் தீதே!' என்று சொல்கிறது!"

"மூன்றாவது பொம்மை?"

"வாயைப் பொத்திக் கொண்டு இருப்பதுதானே? 'தீயார் குணங்கள் உரைப்பதும் தீதே!' என்று சொல்கிறது!"

"பலேடா, பையா, பலே! இந்த மூன்று தத்துவங்களை மட்டும் நீ வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தால் போதும் - அவற்றால் உனக்கும் நல்லது; இந்த உலகத்துக்கும் நல்லது! - என்ன புரிந்ததா?" என்றார் தகப்பனார், அவன் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.

"புரிந்தது அப்பா!" என்றான் மகன்.

மறுநாள் காலை; செலவுக்குப் பணம் எடுப்பதற்காக அலமாரியைத் திறக்கப் போன அஞ்சுகம், "ஐயோ!" என்று அலறினாள்.

"என்ன, என்ன நடந்தது!" என்று பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே வந்தார், ஆலாலசுந்தரம்.

"போச்சு, எல்லாம் போச்சு!" என்றாள் அவள்.

"என்ன போச்சு, எது போச்சு? சொல்லித் தொலையேன்!" என்றார் அவர்.

"நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த இந்த மாதச் சம்பளம், என்னுடைய தங்கச் சங்கிலி, வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாமே போச்சு யாரோ ஒரு திருடன் ராத்திரி வந்து பூட்டை உடைத்து எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போயிருக்கிறான்!"