பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

614

விந்தன் கதைகள்

"அவர்களுக்கு மட்டுமா? வெற்றிலை, பாக்கு வாலா, தேங்காய் வாலா, பழம் வாலா, பூ வாலா, ஐஸ்கிரீம் வாலா, மிட்டாய் வாலா, பட்டாணி வாலா, வேர்க்கடலை வாலா - இவர்களையெல்லாம் ஏன் விட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டான் பையன்.

"விடுவேனா? கொஞ்சம் பொறு! அவர்களில் ஒருவரைக்கூட விடாமல் உன்னுடைய கண் முன்னால் அப்படியே தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறேன்" என்றார் அப்பா.

"ஐயோ, வேண்டாம்ப்பா! இப்போதே என் தலையை வலிக்கிறது; நீங்கள் அவர்களை விடாவிட்டால் நான் உங்களை விட்டுவிடுவேன்" என்று மிரட்டினான் செல்வம்.

சிறுகதை மன்னர் என்ன செய்வார், பாவம்! அவனுடைய விருப்பம் போல் அவர்களை அப்படியே விட்டுவிட்டு "அதோ வருகிறாள் பார், ஒருத்தி" என்று தம் கதையின் அடுத்த பகுதிக்குத் தாவினார்.

அப்போதாவது செல்வம் அவரை விட்டானா? - இல்லை "எங்கே வருகிறாள், அப்பா?" என்று தெருவை எட்டிப்பார்த்தான்.

"தெருவில் வரவில்லையடா, கதையில் வருகிறாள்?" என்றார் அவர்.

"சரி, வரட்டும் - அப்புறம்?" என்றான் அவன்.

"அள்ளிச் செருகிய கூந்தலிலே கிள்ளி வைத்த ரோஜா, "இதோ நானும் இருக்கிறேன்!" என்று எட்டிப் பார்க்க, நெற்றியிலே கற்பூரப் புகைக்கு மேல் வைத்திருக்கும் குங்குமப் பொட்டு, 'நானும் தி.மு.க. வாக்கும்!' என்று சொல்லாமல் சொல்ல, கண்களிலே இட்ட மை கரைந்து..."

சிறுகதை மன்னர் தம்முடைய . 'படப்பிடிப்'பை முடிக்கவில்லை; அதற்குள் பாட்டி வந்துவிடவே, "நான் வருகிறேன் அப்பா உங்கள் கதாநாயகியை விட பாட்டியின் கதாநாயகியைத்தான் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது. ஏனெனில் வானம் பற்றி எரிந்த பிறகு, பறவைகள் பார்த்துப் பயந்த பிறகு, கோயில் மணி அடித்த பிறகு, குருக்கள் பூஜை செய்த பிறகு, பிச்சைக்காரர்கள் கூட்டம் கூடிய பிறகு அவள் வந்து என் பொறுமையைச் சோதிப்பதில்லை; எடுத்த எடுப்பிலேயே வந்துவிடுகிறாள் - கதை கேட்பவர்களின் நேரமும் பொன்னான நேரந்தான் என்று மதித்து!" என்று சுடச்சுடச் சொல்லிவிட்டு எழுந்தான் செல்வம்.